வியாழன், 9 பிப்ரவரி, 2017

இரண்டாவது குழந்தைப் பருவம் கொண்டாட்டமா திண்டாட்டமா

உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள்  சந்திக்கும் போது பொதுவாக அதிகம் அவசியமற்ற விஷயங்கள் பேசப் படுகின்றன என்பதே என் எண்ணம்.எது அவசியம்,எது அவசியம் இல்லை என்பது வேறுபடலாம்.இன்று எனக்கு ஏற்பட்ட சந்திப்புகள்,பாதிப்புகள்,விவாதங்களே இந்த போஸ்ட்.எல்லா காலங்களிலும் speech silver , silence gold தான். உங்களுக்கு,எனக்கு,ஏன் எல்லாருக்கும் சில விஷயங்கள் பேசி பலனில்லை என்று தெரியும்.ஆனாலும் பேசுவோம்.பகவான் விஷ்ணுவின் அடிமுடி காண இயலாத அளவு ஒரு பிரச்சினை முதியோருக்கும் இளையவர்களுக்கும் நடுவில் நடக்கும் மனப் போராட்டங்கள். இன்று என்  தங்கை கேட்டாள் , "குழந்தைகளுடைய  சிறுவயதில் ஆசை ஆசையாக எல்லா இடத்துக்கும் பெற்றோர்  கூட்டிச் செல்கிறார்கள்,தளர்நடை பயிலும் செல்வங்களைக் கைப் பிடித்து அழைத்துச் செல்வது இன்பம் தருகிறது.ஆனால் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி,பெற்றோரை அப்படி அழைத்துச் செல்வதிலும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் அந்த அளவு இன்பம் காண்பதில்லையே,ஏன்? " சரியான கேள்வி.அம்மா,அப்பாவை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட மனசாட்சியிடம் சற்றுப் பேசிப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படும்.முதியவர்களை குழந்தைகளிடம் காட்டும் அதே பாசத்துடன் அணுகுகிறோமா?சற்றும் சலிப்பில்லாமல்? ஆமாம் என்று சொல்லும் யாரையும் நான் நம்ப மாட்டேன்.நம் குழந்தைகளுடன் நமக்கு உள்ள கெமிஸ்ட்ரி வேறு.பெற்றோரிடம் உள்ளது வேறுதான். காரணம் என்ன?

அறியாய் பருவத்தில் இருக்கும் குழந்தையும்,எல்லாம் அநேகமாக அடங்கிய முதியோரும் சார்ந்து இருப்பவர்கள்.யாரோ ஒருவரை சார்ந்து செயல்பட வேண்டி உள்ளவர்கள்.இரண்டு சார்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளே சலசலப்புகள்.குழந்தையை நம் விருப்பப் படி எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்வோம்.என் குழந்தைக்கு கோவில் என்றால் உசிர் என்று நாமே முடிவு செய்த ஒன்றை குழந்தை மேல் திணித்து நாம் விரும்பும் இடங்களுக்கு சென்று வருவோம்.நம் நம்பிக்கைகளே பெரும்பாலும் நம் குழந்தைகளின் நம்பிக்கை.இளம் குழந்தைக்கு யோசிக்கும் திறன் வளர நாளாகிறது.மனதளவிலும் உடலளவிலும் அது நம்மால் வழி நடத்தப் படுகிறது.நமக்கு ,நம் ஈகோ நிறைந்த மனசுக்கு அது சந்தோஷம் தருவது வியப்பில்லை.ஆனால் முதியவர்கள்! அவர்களுக்கு தேர்வு செய்யத் தெரியும்.எங்கே செல்ல வேண்டும்,எங்கே தங்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கத் தெரியும்.பண்ண வேண்டிய மனம் சம்மந்தப் பட்ட முடிவுகளைத் தாம் செய்கிறார்கள்.தங்கள் பாதுகாப்புக்கு இளையவர்களைச் சார்ந்துள்ளார்களே தவிர அவர்கள் பற்றி வேறெதையும் யோசிக்கும் மனநிலை பெரும்பாலான பெரியவர்களுக்கு இருப்பதில்லை.ஏன் பிரச்சினை வராது? Decisions எல்லாம் Lead பண்ணுபவரிடம் இருந்தால் தகராறு இல்லை.முடிவை நான் எடுப்பேன்,நீ கதையை நடத்து என்றால் சலிப்புதான் வரும்.அதுவே - நாம் உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் அந்த சலிப்பே பெரியவர்கள் தாம் ignore பண்ணப் படுவதாய் நினைக்க முக்கியக் காரணம்.

இதில் மாற வேண்டியது முதியோர்தான்.குழந்தைகள் இயல்புப் படி நடந்து கொள்கிறார்கள்.நடுவயது மனிதர்கள்,சிலர் தவிர பெரும்பாலானோர் நன்றாக நடந்து கொள்ளவே முயற்சி செய்கிறார்கள்.அவர்கள் அடையும் ஆயாசமும் வயதிற்கு இயல்பாக வரும் ஒன்றே.இயல்புக்கு முற்றிலும் புறம்பானவை செய்யும் முதியோர்தான் யோசிக்க வேண்டியவர்கள்.நான் முதியவர்களுக்கு எதிரி அல்ல. பட்டாம்பூச்சி பறப்பது போல் நிமிஷமாகப் பறந்து சென்ற என் அன்பு அப்பா போல், துறக்க வேண்டியவற்றை நிச்சலனமாகத் துறந்து அமைதி அனுபவிக்கும் முதியோருக்கு நான் எதிரி அல்ல.குழந்தை எப்படி உலகிற்கு வருகிறது?அப்படியே உலகை விட்டு நீங்குபவர்களுக்கு மட்டும்தான் அமைதி கிடைக்கும்.Second childhood என்றால் உடலளவில் மட்டுமா?மனத்தாலும்தானே? ஆயிரம் எண்ணங்கள் அலைமோதுகின்றன.எழுத முடியாது என்று தோன்றுகிறது. குழந்தை தனக்கென தனிமனது பெறும் நொடி அதன் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன.முதியவர்கள் தன் தனிமனதை இழந்த நொடி அவர்கள் போராட்டங்கள் முடிவடைகின்றன.

இன்று அரவிந்த அன்னையின் அவதாரத் திருநாள். பிப்ரவரி 21 ம் நாள்.என்றோ தொடங்கிய போஸ்ட்.இன்று முடிக்கிறேன்.தெய்வங்களும் குழந்தைகளாகவே பிறக்கின்றன.மனத்தால், பல வருஷங்களுக்கு முன் ஜனித்த அந்த தெய்வ குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.மனத்தின் ஆழங்களுக்கு பயணிக்கும் போது எல்லாமே அமைதி என்று  தெரிகிறது. சலனங்கள் வெளியேதான்.தெய்வத்தின் அருள் கொடை கற்பக வ்ருக்ஷம் போல . We can receive it in the silence of the heart.இன்றுள்ள மனநிலையில் தலைப்புடன் தொடர்பாக ஏதும் பேச இயலவில்லை. நாம் விரும்புவது போலவே வாழ்வு அமையும் என்ற உத்தரவாதம் யார் தர இயலும்? நம்மால் வேறெதுவும் செய்ய இயலாது என்ற கடைசி நாட்களுக்காக உள்ளே செல்லும் பயணம் ஒத்திப் போடப்பட்டால் அது முட்டாள்தனமல்லவா?சாக்ரடீஸ் விற்பனைக்காக பரப்பப் பட்டிருந்த பல ஆடம்பர பொருள்களை பார்த்து அதிசயித்தாராம்!"உலகில் எனக்கு வேண்டாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன"என்று.இரண்டாம் குழந்தைப் பருவத்தில் ஒவ்வொன்றாக விடத்தானே வேண்டும்? உறவுகள் ஆசைகள்,செல்வம்,பதவி,புகழ்,தேவையற்ற எண்ணங்கள் என்று குழந்தை ஒவ்வொன்றாக சேர்க்கத்  தொடங்குவது போல ,மறுபடி குழந்தைகளாகி விட்டோம் என்பவர்கள் ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்க வேண்டும் அன்றோ?என்னைத் திட்ட முடியாது. நான் வாழ்வின் இரண்டாம் பாகத்தில்தான் இருக்கிறேன்.சொல்பவை அனைத்தும் முதலில் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்.

தளர்நடையும், பொக்கைவாயும்,ஒருவரை மறுபடி குழந்தை ஆக்குவதில்லை.மனசு என்று ஒன்று உள்ளதே அதுதான் குழந்தை ஆக்குகிறது.பின் ஏன் சிலரைப் பார்த்து அவருக்கு குழந்தை மனசு என்கிறோம்? நிஜமான குழந்தை போல உள்ள முதியவர்கள் குழந்தை அடையும் அத்தனை சலுகைகளையும் அடைந்து,Second Childhood ஐ கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் திண்டாடுகிறார்கள்.அதற்கு அவரவரே பொறுப்பு.உலகில் குழப்பங்கள் இல்லை.எல்லாக் குழப்பங்களும் மனதில் மட்டுமே.ஒரே உலகம் சிலருக்கு சொர்கமாகவும் சிலருக்கு நரகமாகவும் தெரிந்தால் குறுக்கிடுவது மனம்தான் என்று உணர்வோம் . Seneca writes to his friend Lucillius,"நேரம் தவிர வேறெதுவும் உலகில் நம் சொந்தமில்லை.ஆனால் வேண்டாத பல விஷயங்கள்,மனிதர்கள் நம்மிடம் இருந்து அதை திருடி விட இயலும்.திருடினவர் நினைத்தாலும் திருப்பித் தர முடியாத ஒன்று என்பதே அதன் சிறப்பு.நம்முடையது என்ற ஒரே பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? Certain moments are torn from us.Some are gently removed.சீக்கிரம் விழித்துக் கொள் நண்பனே " என்று.Life span நூறு வருஷம் என்றால்,ஐம்பது யோசிக்க சரியான வயதுதானே ? சொல்லப் போனால் லேட் .பேசுவோம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பெண்களின் ஆன்மீக வாழ்வு

ஆன்மிகம் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருள்,எனக்குத் தெரியாது.கத்திரிக்காய் என்றால் தெரியும்.கடலை மிட்டாய் என்றால் தெரியும்.ஆன்மிகம் என்றால் என்ன என்றால் எப்படிக் காட்டுவது?அது ஒரு உணர்வு.ஒரு பொருள் நம் அனைவர் மனங்களிலும் ஒரே பிம்பத்தை உண்டாக்குவது போன்று ஒரு உணர்வு ஒரே எண்ணத்தை நம் மனத்தில் உண்டாக்குமா என்றால்,இல்லை.நம் அனுபவங்களுக்கேற்ப,யோசிக்கும் திறனுக்கேற்ப சில விஷயங்களைப் புரிந்து  கொள்கிறோம்.எனக்குப் புரிந்த வரை,ஆன்மிகமும்,மன அமைதியும் தொடர்புடையவை.இரட்டைக் குழந்தைகள் போல .(அம்மா வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகளைக் குறிப்பிடுகிறேன்.) If we are at peace with our own self,and also with the world ,அதுவே முழுமை.

நமக்குத் தெரிந்த ஆன்மிகப் பெரியோர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.ஏன்?கடவுள் கூட,தன்அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு (Reservation) வைத்துள்ளாரா என்ன! ஏன்,நாம்  100 ஆண்களுக்கு ஒரு பெண்ணைக் கூட குரு ஸ்தானத்திற்கு உயர்த்துவதில்லை ? இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்களுடன்,இறையுடன் ஒரு குட்டி தொடர்பு,ஒரு வினாடி உண்மையான தொடர்பு ஏற்பட்டால் கூட அந்த மனிதன் கட்டாயம் Humble ஆகி விடுகிறான்,என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.பெண்ணின் இயல்பு அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு நிறைந்தது . பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள்தான்.Intuitive ஆக அவர்களுக்குள் இறை உணர்வு  உள்ளது.இன்றைய பெண்கள் பற்றி தப்பு தப்பாய் பல பேசுகிறோம்.திமிர்,யாரையும் மதிக்க மாட்டார்கள் ,தடிப் பசங்களுக்கு சரியாக எல்லாம் செய்வாள் என்று காதால் கேட்க இயலாதவற்றை எல்லாம் கூறுகிறார்கள். தவறு.பாவம்.எப்படி பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறு அமைப்பில் உடல் படைக்கப் பட்டுள்ளதோ அதே போல் இயல்பும் வேறாகத்தான் இறைவன் படைப்பு நிகழ்கிறது.மாற்றுகிற வேண்டாத வேலை செய்வது நாம்.ஒரு உயரதிகாரியின் வேலையில் வாயில் காப்பவர் குறுக்கிடுவது போல் இறைவன் படைப்புடன் விளையாடி துன்பம் தேடுகிறோம்.பெண்ணின் இயல்பை மாற்ற முயலும் நாம் வேறென்ன செய்து விட முடியும்? உருவத்தையும் மாற்ற முடியுமா என்ன?

பெண்களை இயல்புப் படி விட்டால் அனைத்துப் பெண்களும் ஆன்ம பலம் பெருமளவில் கொண்டவர்கள்.கர்மயோகிகள்.அனைத்துப் பெண்களும் அம்மாக்கள்.பௌதிகத் தாய்மார்கள் மட்டும் அம்மா இல்லை.பெண்களை weaker sex என்கிறோம்.ஆனால்,அவர்களுடைய physical energy ம் தாங்கும் திறனும் அலாதியானது.பெண்கள்,தங்கள்  இயல்புப் படி ஞாயத்தின் பக்கம் நிற்க கூடியவர்கள்.ஆனால் கற்பு என்றதில் தொடங்கி எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்ணுக்கே விதிக்கப் பட்டன."கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"என்றார் மஹாகவி பாரதியார்.கட்டுப்பாடு யாருக்கு உண்மையில் தேவை? ஒவ்வொரு பெண்ணின் மனதுமே அவளின் நீதிபதி.புறக் கட்டுப்பாடுகள் பகவான் கிருஷ்ணனை தாய் யசோதா கட்டியது போல் ஒரு பாவனைதான்.

பெண்களின் வாழ்வே ஆன்மிக வாழ்வுதான்.அவர்கள் தனியாக எதுவும் செய்யத் தேவை இல்லை.உபநிஷத ,வேத காலங்களில் மைத்ரேயி போன்ற பெண்கள் ரிஷிகளுக்கு சமமானவர்களாகத் திகழ்ந்தார்கள் என்ற குறிப்புகள் உள்ளன.சோழ மன்னர்கள் காலத்தில்,குந்தவைப் பிராட்டி போன்று அரசியலில் முக்கியப் பங்கு வகித்த பெண்கள் உண்டு.அவர்களின் வழி தோன்றல்கள்தான் எல்லாப் பெண்களும்.பின் வந்த காலங்களில் மாற்றங்கள் தொடங்கின.பெண்கள்  நிலைமை மட்டும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது .காரணம் அவர்கள் தன்பலம் அறியாமல் இருப்பது.பெண்ணுடல் போர்த்துக் கொண்ட தருணம் ஆத்மா தான் உடல் கடந்தது என்பதை மறந்து விடுமோ? Women think with their heart and men with their head என்று சொல்வார்கள்.அது உண்மைதான். ஆணுக்குத் தன்னை நேசித்துக் கொள்வதே முதன்மையாக உள்ளது.பெண்கள் பிறந்தது முதல் தன்னை இரண்டாம் இடத்திலேயே வைத்துக் கொள்கிறார்கள்.தியாகம் என்ற பெயரில் அன்பு என்ற பெயரில்  தன்னை தொலைத்து விடுதல் அவர்களுக்கு சுலபமாய் செய்ய வருகிறது.உள்ளே உள்ள வஸ்துவுடன் ஏற்படும் தொடர்பைத் தக்க வைக்கும் சக்தியை,பெண் மேல் திணிக்கப் பட்ட, அவளாக ஏற்படுத்திக் கொண்ட கட்டுகள் வலிமை இழக்கச் செய்கின்றன.   அதெல்லாவற்றையும் தாண்டி இறைவன் அழைப்பு உள்ள பெண்கள் விடுபட்டு விடுகின்றனர்.

ஆனால் எனக்கு இது புதிராகவே மனதில் தங்கி உள்ளது.ஆணுடன் ஒப்பிட்டால் உள்ளுணர்வு அதிகம் கொண்ட பெண்கள் ஏன் பிறர் போற்றும் அளவு அறியப் படவில்லை? இல்லை எனக்குத் தெரியவில்லையா?அப்படியே நான் அறியாமையில் இருப்பினும் விகிதம் குறைவு என்பது உண்மை அல்லவா?எல்லாத்  துறைகளிலும்  பெண்கள் சமமாக சாதிக்கிறார்கள்தான்.ஆனால் அதுவுமே கூடசரி  சமம் இல்லை. அதற்கு பெண்குழந்தைகளைக் கருவில் கொல்ல நினைக்கும்,பெண் பிறந்து விடுமோ என்று திகில் கொள்ளும் முட்டாள் மனங்கள் திருந்த வேண்டும்.புறம் சம்பந்தப் பட்டவை இப்போது பேச வேண்டாம்.அகம் தொடர்பான ஒரு உலகில் ஏன் குடத்துள் விளக்கு போலத்தான் பெண்கள் இருக்கிறார்கள்?ஆனால் ஒன்று.வெளியே ஆன்மிகவாதிகளாய்த் தென்படும் பலரின் வாழ்வை விட,சாதாரண ,ஆர்பாட்டமற்ற ,வெகுளியான இந்தியப் பெண்ணின் வாழ்வு வணங்கத் தக்கது.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 21 ஜனவரி, 2017

கொசுவலைக்குள் த்யாகு

சென்ற சில போஸ்ட்களை வாசித்த ஒரு நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.அவர் கூறினார்,"எல்லாம் படித்தேன்.ஆனால் எழுத்துக்கள் யார் மீதோ உள்ள கோபத்தை நீ  வெளிப் படுத்துவதாக உணர்கிறேன்.உனக்கு லைட்டாக எழுத வராதா?" யோசித்துப் பார்த்தேன்.ஏதோ நம்மைத் தொடும் போதுதான் எழுத முடிகிறது.மகிழ்ச்சியான தருணங்களை மனம் அமைதியாக அசை போடுகிறது.கோபங்களுக்கு எழுத்து வடிகால்.அவ்வளவே.என் கோபங்கள் தார்மீகக் கோபங்கள்.வன்மங்கள் இல்லை.இந்த போஸ்ட் இரண்டு வாரமாக மனதில் உட்கார்ந்துள்ளது.நண்பர் அறிவுரையை ஏற்று நகைச்சுவை எழுத முற்பட்டுள்ளேன் என நினைக்க வேண்டாம்.எனக்கு அது வருவதில்லை.சரி,... சொல்ல வந்ததை பேசி விடுவோம்.

ஏதேனும் அல்ப விஷயம் சொல்ல வேண்டி வந்தால்,கொசு மாதிரி என்று கூறுவோம்.அது எவ்வளவு தவறு என்று கொசுக்கடியுடன் தூங்குபவருக்கே தெரியும்.வர்தா புயல் வந்தாலும் வந்தது.குடியிருப்பை சுற்றி விழுந்த மரங்கள்,தேங்கிய நீர்,அப்புறப் படுத்துவதில் தாமதம்.கேட்கவா வேண்டும்? கொசுக்கள் பெருகி,இரவு பூரா கொசு அடித்து தூக்கம் தொலைத்தோம்.ஓடோமாஸ்,சுருள்,இத்யாதிகளுக்கெல்லாம் அவை அசரவில்லை.கிட்டத்தட்ட 30 வருஷமாய் என் தொணதொணப்பு,தினமும் Boss தரும் sermon அதெல்லாவற்றையும் விட த்யாகுவை சற்றே அதிகம் பயமுறுத்தின கொசுக்கள். கொசுவலைதான் ஒரே தீர்வு என முடிவெடுத்து ராமஜபம் செய்வது போல் தினம் பத்து முறை" கொசுவலை வாங்கணும்" என சொல்லிவிட்டுத் தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.அது எந்த விதத்தில் உதவியது தெரியவில்லை.யாருக்குத் தெரியும் இந்த சைக்காலஜி எல்லாம்.எனக்கோ சாமான் கூடினால் அலர்ஜி வரும்.வாங்க வேண்டாம் என்றால் இன்னும் கூடுதலாய் கொசுவலை பற்றி பாடம் நடத்துவார்.வாங்கினால் பார்த்துக் கொள்ளலாம் என தப்பு கணக்கு போட்டேன்.ஏனென்றால் என் நம்பிக்கை அப்படி.ஒரு சின்ன 80 பக்கம் நோட்டு பூரா வீட்டிற்காக அவர் உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைத்துள்ளேன்.இன்னும் முதல் பக்கமே திருப்பிய பாடில்லை.ஆண்களுக்கு மனைவி மேல் உள்ள நம்பிக்கையும் அப்படி.80 பக்கத்தில் உள்ள எல்லாவற்றையும் எப்படியாகிலும் முடித்து விட்டு, "நீ சூப்பர் "என்ற இரண்டு வார்த்தையில் மயங்கி,அடுத்த நோட்டுக்கு விஷயம் சேகரிக்கும் அப்பாவிகள்.ஆனால் கொசு இன்னும் வலிமையானது என்று உணரும் நேரமும் வந்தது.

பாண்டிச்சேரி போய்விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாலையில் கொசுவலைகளைப் பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் கண்ணில் பட்டார்.காரை நிறுத்தி விட்டு , குணா படத்தில் கமல்ஹாசன் அபிராமியைத் தரிசிக்கும் போது ஒரு பாவம் (BHAVAM  )காட்டுவாரே அது  போல பரவசத்துடன் இவரும் கொசுவலை விற்பவரை நோக்கிப் போனார்.பத்தே நிமிஷத்தில் பேரம் படிந்து,கையில் நூறு ரூபாய் நோட்டே இல்லாமல் நாடு திண்டாடிக் கொண்டுள்ள சமயம் கையில் இருந்த எட்டு நூறு ரூபாய்த் தாள்களையும் கொடுத்து வாங்கிய கொசுவலையைத்   தூக்க முடியாமல்  தூக்கி வந்து கார் டிக்கியில் வைத்தார். பசங்களும் நானும் சற்று அதிருப்தியுடன் ஒருவரை ஒருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டோம்.த்யாகு அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலையிலேயே இல்லை. இனிமையான தூக்கம் அல்லவா,பல நாள்களுக்குப் பின்?மனதைத் தேற்றிக் கொண்டேன்.ஏனென்றால்,அழகாக மடிக்கப் பட்ட கொசுவலை சிறு Briefcase அளவே இருந்தது. இடம் அடைக்காது.எனக்கு என் கவலை.வீட்டிற்கு வந்தவுடன் கவர் பிரிக்கப் பட்டது. கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டேன்.பட்டணத்தில் பூதம் பட ஜீபூம்பா போல கொசுவலை விரிந்தது. "மூன்று பேர் இதற்குள் தூங்கலாமாம்.அவன் சொன்னான்" என்றார் .எனக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

இரவும் வந்தது.எங்களை எல்லாம் ஒப்புக்கு ஒரு வார்த்தை கேட்டுவிட்டு,மிதப்பாக கொசுவலையைப் பிரித்து அதில் உள்ள சிறுவாயில் வழியே கஷ்டப் பட்டு உள்ளே போய் படுத்து கொண்டார்.அரசகுமாரிகள் மஞ்சத்தில் உறங்குவதை சினிமாவில் பார்ப்போமே அது போல ஒரு ஸ்டைல்.கொசுவலையை சுற்றி வந்த கொசுக்கள் எல்லாம்" நோ என்ட்ரி "போர்ட் பார்த்தாற் போல அடுத்த டார்கெட்டாக எங்கள் பக்கம் திரும்பின.தன் விஷயம் ஜயித்ததால்,த்யாகு அலட்சியப் படுத்திய  ஓடோமாஸ்,கொசு விரட்டும் மற்ற உபகரணங்கள் சீந்துவாரற்று இருந்தன.பெண்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.தலையணையை முகர்ந்தால் தூக்கம் வந்து விடுகிறதே?அறையில் நாலு பேரையும் சமமாகக் கடித்த கொசுக்கள்,இப்போது மூன்று பேரைக் கவனித்தால் போதும் என்று வேலையைத் தொடங்கின. அது மட்டும் இல்லாது ஒவ்வொரு முறையும் ஏதேனும் எடுக்க வெளியே வந்தால் ஒரு கொசு உள்ளே வந்து விடுமோ என,என்னைப் பலமுறை அன்போடு அழைக்க ஆரம்பித்தார்.குடிக்க தண்ணி,விக்ஸ்,மொபைல் ,படிக்க துக்ளக் .......சரி ரொம்ப நாள் இவ்வளவு ப்ரயத்தனப் பட்டு கொசுவலை உபயோகிக்க மாட்டார் என்று பார்த்தால்,அவர் ஒன்றும் கண்டுகொள்வதாயில்லை.இன்னொரு வேலையும் எனக்கு  சேர்ந்து கொண்டது.மறுநாள் அதை மடித்து வைப்பது.அதுதான் கவரில் இருந்து வெளியே வந்தவுடன் விஸ்வரூபம் காட்டியதே.இதோ இப்போது கூட கொசுவலைக்குள் இருந்து அழைப்பு வருகிறது.

பெண்கள் பற்றி,காளிதாசன் காலம் தொட்டு என்னென்னமோ சொல்கிறார்கள்.கடைக்கண் பார்வையில் எல்லாம் சாதித்துக் கொள்வார்கள்,விழியினால் வலை போட்டு அதில் மாட்ட வைத்து விடுவார்கள்,நிமிஷத்தில் கண்ணில் நீரை வருவித்து எதையும் அடைந்து விடுவார்கள்,தலையணை மந்திரம் ஓதுவார்கள்,கணவனைக் கட்டிப் போட்டு விடுவார்கள் .....எல்லாம் சும்மா.ஒரு கொசுவலைக்குள் த்யாகுவை கட்டிப் போட்ட கொசு செய்வதைக் கூட (அது ஆறே மணி நேரமாயினும்) என்னால் செய்ய முடியவில்லை.எனக்குத் தெரிந்த பெண்கள் நிலையும் இதுவே.விதிவிலக்குகள் இருக்க வாய்ப்புண்டு.அவர்களைக் கூட ஸ்மார்ட்டான பெண்கள் என்று சொல்வதை விட அந்த ஆண்கள் கொஞ்சம் பயந்தவர்கள் என்றுதான் கூறுவேன்.ஏற்கெனவே ஒரு போஸ்ட்டில் சொல்லிவிட்டேன்.ஆனாலும் மறுபடி சொல்ல நினைக்கிறேன்.ஆண்களுக்கு உலகம் வீடு.பெண்களுக்கு வீடே உலகம்.ஆண்களை அறிந்து கொள்ள அந்தப் பெரிய உலகிற்குள் பெண்கள் வர வேண்டும்.ஆனால் பெண்மனம் அறிய வீடு என்ற சிறு உலகிற்குள் ஆண்கள் வந்தால் போதும்.எது சுலபம்,சொல்லுங்களேன்.ஆத்மார்த்தமாக வர வேண்டும்.மனத்திற்கு ஆண்பால்,பெண்பால் இல்லை.எல்லா மனமும் ஆழமானதே.பெண்மனம் ஆழம் என்று கவிதை சொல்லி ஒதுங்காமல், இயல்பாய், அங்கு என்னதான் உள்ளது என்று தேடலாமே? பெண்கள் பற்றி பேச இன்னும் எத்தனையோ உண்டு.பேசுவேன்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

2017 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் சில பதிவுகள்

எங்கள் இளமைக்கால பொங்கல் விழா அமைதியானது.இப்போது பொங்கல் ஆரவாரம் நிறைந்தது.இரண்டும் சரிதான்.ஆழ்கடல் போல ,பொங்கும் வெள்ளமும் அழகே.ஆனால் எதற்காகக் குதூகலிக்கலாம் என்று வரைமுறை இருந்தால் கொஞ்சம் நலமாக இருக்கும்.வீட்டுப் பெண்கள் பொங்கல் வைக்கும் நேரம் ஆயிற்றே என்ற யோசனை துளியும் இல்லாமல் சன் தொலைகாட்சி ஒவ்வொரு வருடமும் திரு சாலமன் பாப்பையா (ஐயா வணக்கம்,நான் உங்கள் விசிறி)அவர்களுடைய சிறப்பான தலைமையில் 10 மணிக்கு ஒளிபரப்பும் பட்டி மன்றத்தில் இருந்து ,கிராமிய பொங்கல்,அந்த நடிகை வைத்த பொங்கல்,இந்த நடிகர் டேஸ்ட் பார்த்த பொங்கல் என பல நிகழ்ச்சிகள் எல்லா சேனலிலும் இடைவிடாது ஒளிபரப்பாயின. என் நேரம் நல்லதாக இருந்ததால்,திரு.சுகி சிவம் அவர்கள் கம்பன் கழகத்திற்கு ஆற்றிய உரையையும்,தூர்தர்ஷன் சானலில் திருவள்ளுவர் தினத்திற்காக (இன்று 16 ஜனவரி திருவள்ளுவர் தினம்) ஒரு பெரியவர் ஆற்றிய சிறப்புரையையும் கேட்க நேர்ந்தது.அவர்கள் பெயரைத் தொடர்ந்து கீழே போட்டால் என்ன?நடிகர்கள் நேர்காணலின் போது ,நமக்குத் தெரியும் என்று தெரிந்தும் நொடிக்கொரு முறை பெயர் போடுகிறார்கள். இரண்டு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றிய பெருமக்கள்  பேச்சில் மனம் தொட்ட சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.அதற்கு முன் ஒன்று கூறுகிறேன்.2 மணிக்கு சண்டை,6 மணிக்கு ரௌத்திரம், தொடர்ந்து  வேட்டை,பிச்சைக்காரன்.வேதாளம், போக்கிரி, சைத்தான்.... பொங்கலும் அதுவுமாய்க் கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்று திட்டாதீர்கள்.தமிழ்ப் பட பெயர்கள். சினிமா துறையைக் கிண்டல் செய்யவில்லை.இவை நல்ல படங்களாக இருக்கலாம்.ஆனால் இப்பெயர்கள் தாங்கின படம்,பட்டிமன்றம் போன்ற இரண்டு நிகழ்ச்சிகள் இருந்தால் பின்னதையே பார்க்க தோன்றுகிறது.

"நாம் அனைவரும் ராவணன் இனம்தான்,அவன் வெளியேயும் ராவணன்,நாம் உள்ளே ராவணர்கள்" என்று தொடங்கினார் சுகி சிவம் அவர்கள்.ராவணன் சீதை மேல் கொண்ட எண்ணத்திற்குப் பெயர் என்ன?எதற்காக பிராட்டியைக் கவர்ந்து சென்றான்,தன் உயிர் பிரியும் முன் அந்த மாயவலையில் இருந்து விடுபட்டானா,அல்லது அவன் தெளிவடையாமலே உலகை நீத்து விடுகிறானா என்பதை,கம்பன் பார்வை,தன் பார்வையில் இருந்து விளக்கினார்.சூர்ப்பணகை மூக்கு அறுபட்டு வருகிறாளாம்.சினம் கொண்ட ராவணன், காரணம் கேட்டறிய முற்படுகையில்,அரக்கியாய் இருப்பினும் பெண் என்பதால், ராமன் மேல் கொண்ட மோகத்தால் கிடைத்த தண்டனை என்பதை வெளியிட நாணி,ராவணனைக் கவரும் விதமாய் சீதாபிராட்டியை வர்ணிக்கிறாள் .ராவணன்,"நீ என்ன செய்தாய்" எனக் கேட்பதாய்க் கம்பநாடார் உரைக்கிறார்.ராமனிடம் தான் பேசியவற்றைக் கூறாது ,அவன் weakness எது என அறிந்து,அவனை திசை திருப்புமாறு சீதை பற்றி வர்ணிக்கிறாள் .அவள் கூறுவதைக் கேட்கக் கேட்க ராவணன் மனதில் ஒரு பெண் பிம்பம் உருவாகிறது.ராவணன் தேடிவந்ததும்,கவர்ந்து சென்றதும் அந்த சீதையைத்தான் .Physical ஆகக் கவர்ந்து சென்றதை இங்கு குறிப்பிடவில்லை.உண்மையான சீதை பற்றி அவன் அறியான்.அவன் மனம் கவர்ந்த தன்  எண்ணத்தில் உருவான ஒரு பெண்ணையே பிராட்டியில் காணப் படாத பாடு படுகிறான்.மாயையால் அலைக்கழிக்கப் படுகிறான்.ஆனால் அவன் சிறந்த சிவபக்தன்.மாயை நீங்கித் தெளிவு பெற்ற பின்னரே அவன் மூச்சு பிரிகிறது.தெளிவு எப்படி வந்தது?அவன் தெளிவு பெற்றான் என நாம் எப்படி அறிவோம்?

பொதுவாக இதிகாசங்கள், பெரிய படைப்புகள் செய்வோர் வெறும் கதை சொல்வதற்காக எழுதுவதில்லை.ஒரு முறை கேட்ட கதையை மறுபடி கேட்க அதே ஆர்வம் இருக்காது.(ராமாயணம் விதிவிலக்கு.நம்மில் கலந்தது.)வால்மீகியை கம்பன் மொழிபெயர்க்கவில்லை.ராமாயணக் கதை மூலம் செய்தி சொல்வதே அவர் நோக்கம்.அயோத்தி மாநகர்,ஆரண்யம்,அமர்க்களம் இவை மூன்றில் கம்பன், தான்  சொல்ல விரும்பிய பல விஷயங்கள் சொன்னது அமர்க்களத்திலேயே.ஏனென்றால் நகரம் கட்டுப்பாடு நிறைந்த இடம்.காடோ கட்டுப்பாடு சுத்தமாய் அற்ற இடம்.ஆனால்,போர்க்களம்?மனிதனின் உண்மை இயல்பு,ஞானம் பரிபூரணமாக வெளிப்படக் கூடிய இடம் போர்முனை.  பகவத் கீதையும் போர்க்களத்தில் புகட்டப் பட்டதே என்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.ஒரு கட்டுப்பாட்டிற்கு அடங்கியும் கட்டுப்பாடே அற்ற இடத்திலும் அமைதி காப்பது பெரிதல்ல.நொடிக்கு நொடி எல்லாம் மாறும் ஒரு சூழலில் அதை செய்தால் வருவதே ஞானம்.ராவணன் தெளிவு பெற்றதும் அமர்க்களத்திலேயே.

14 ஆண்டுகளும் தான் கற்பித்துக் கொண்ட பெண்பிம்பத்தை அடைய ஏதேதோ செய்கிறான்.நடக்கவில்லை.அவன் நடவடிக்கைகள் போர்முனை வரை அவனை இட்டுச் சென்ற பின்னரே,இந்த மாயையை விடப் பெரிய ஒன்று உள்ளது என உணர்கிறான்.அவனுக்குள் இருக்கும் க்ஷத்ரியன் விழிப்படைகிறான்.லங்கையின் பாதுகாவலனாய் உணர்கிறான்.பெரும் சிவபக்தன்.சிவன் வெளியேறி சீதை இருந்த மனம் குழப்பத்தில் இருந்தது.இப்போது,மனசில் இத்தனை வருஷம் பாதுகாத்த பிம்பம் உடைகிறது.பிராட்டியை அசோகவனத்தில் சிறை வைத்தானே தவிர துன்பம் தந்தானில்லை.ஆனால் கடைசிப் போரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை சந்திக்க கிளம்பும் போது சொல்கிறானாம், "இன்று,ஒன்று மண்டோதரி அழ வேண்டும்,அல்லது சீதை அழ வேண்டும்" என.சீதையிடம் கொண்ட மாயமோகம் அகல்கிறது.அவள் கண்ணீர் தன்னை இனி அசைக்கப் போவதில்லை என உணர்கிறான்."சட்" என மாயத்திரை போய் விடுகிறதாம்.இந்த விளக்கங்கள், திரு சுகிசிவம் வாக்கில் மிக அழகாக இருந்தன.ஏன் தெரியுமா?நாம் அனைவருமே ராவணன் பண்ணினதையே செய்கிறோம். பார்க்கும், பழகும், ஒவ்வொரு நபர் பற்றியும் நாம் உருவாக்கிக் கொண்ட பிம்பங்களை உண்மை மனிதர்களாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.உண்மை முற்றிலும் வேறாக இருக்கும் போது, சிலர் அதிர்ச்சி அடைகிறோம்.சிலர் ஞானம் பெறுகிறோம்.அது அவரவர் கர்மபலனைப் பொறுத்தது.இன்னும் பல கூறினார்.அவை பிறகு.

அடுத்து பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சி.பெண்கள் பற்றிய நிகழ்ச்சி.சத்ரபதி சிவாஜியின் தாய் பற்றி அவ்வளவு உயர்வாகக் கூறினார்.பண்டைக்காலத்தில், போரில் ஒரு அரசனை வெற்றி கொண்டால்,அவனது நாட்டில் தொடங்கி அனைத்து உடமைகளும் வெற்றி பெற்ற அரசனைச் சேருமாம். சிவாஜி ஒரு முறை அவ்வாறு போர் முடிந்து தான் வென்ற பொருள்களைப் பார்வை இட்டுக்  கொண்டு வருகிறாராம்.ஒரு பல்லக்கில் தோல்வியுற்ற அரசனின் துணைவி இருக்கிறாள்.பல்லக்கின் திரை விலகுகிறது.உள்ளே இருந்த பெண் நடுங்கி,வெளிறிப் போய் அமர்ந்திருக்கிறாள்.சிவாஜி அவளைப் பார்த்துக் கேட்கிறாராம்," தாயே என்ன ஆயிற்று?தாங்கள் ஏன் இவ்வாறு நடுங்குகிறீர்கள்?"என.இப்போது நடப்பது என்ன? பெண்கள் பற்றின வன்முறைகளைப் பேப்பரில் எழுதவும் படிக்கவும் வெறுக்கிறேன்.சினிமாக்களில் காட்டப் படுவதை அந்தப் படங்களைப் புறக்கணித்து அலட்சியம் காட்ட விழைகிறேன்.அதனால் இன்னும் கோபமான பதிவுகள் செய்யாமல் நிறுத்துகிறேன்.ஆண் குழந்தைகள் பெற்றவர்கள்,மற்ற பெண்களைத் தாய் போல கருத தங்கள் மகனுக்கு கற்பிக்க வேண்டுகிறேன்.

அடுத்த செய்தி.பெண் பெற்றவர்களைப் பார்த்து," பெண்ணை எங்கே கொடுத்திருக்கிறீர்கள் "என்று கேட்போம்.ஆண் குழந்தைகள் பெற்றவரிடம் "எங்கிருந்து பெண் எடுத்திருக்கிறீர்கள்" எனக் கேட்கிறோம்.எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான் . பொருளை வாங்கிக் கொள்பவர் அல்லவோ ஏதேனும் கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும்?பெண்ணையும் கொடுத்து பொருளையும் கொடுக்கும் வழக்கம் இன்னும் மாறாமல் உள்ளதை ஒரு பேச்சாளர் மிக வருத்தத்துடன் குறிப்பிட்டார்."ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்" என்றார் மஹாகவி பாரதியார்.எங்கே தழைக்க விடுகிறோம்?முதலில் பெண்களுக்கே அந்த ஆசை இருப்பதாய்த் தெரியவில்லை.அற்ப விஷயங்களில் ஆண்களுடன் போட்டி போட்டால் சரியாயிற்றா?

கடைசியாய் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கருத்து வேறுபாடு.ஒரே கூச்சல் எல்லா சானல்களிலும் .நடத்தி விட்டுப் போகட்டுமே?காளைகள் துன்புறுத்தப் படுவதாய் பேசுகிறார்கள்.பெட்ரோல் பங்க் ஒவ்வொன்றிலும் கூண்டுக் கிளிகள்.பட்டுப் புடவைக்காக கொல்லப் படும் பட்டுப் பூச்சிகள், உணவுக்காக கொல்லப் படும் ஆடு கோழிகள்,வலை வைத்துப் பிடிக்கும் மீன்கள் எல்லாம் துன்பப் படவில்லையாம்.காளைகள் ஒரு நாள் அடைவது துன்பமாம்.என்ன லாஜிக்கோ?சரி மற்ற கட்சியினரும்தான் எதற்கு கொடி பிடிக்கிறார்கள்?பாரம்பரியம் அழிந்து விடுமாம்.பாரம்பரிய உடையை மாற்றலாம்.பழக்கவழக்கங்களை மாற்றலாம்.பெண்ணைப் பார்க்காமலே கல்யாணம் செய்து கொண்டார்கள்.இப்போ செய்வீர்களா?நாலு மாசமாவது பழகாமல் தாலி கட்டுகிறார்களா? பாரம்பரிய உடைதான் அணிகிறோமா?பாரம்பரிய உணவுதான் சாப்பிடுகிறோமா?அதில் எல்லாம் போகாத பாரம்பரியம் ஜல்லிக்கட்டைத் தடை செய்வதால் போய் விடுமாம்.எத்தனை நேரம்,சக்தி விரயம் பாருங்கள் .

அடுத்த பொங்கல் வரை பேச விஷயம் இருக்கும் போலத் தோன்றுகிறது.பொங்கல் கொண்டாட்ட நினைவுகள் பசுமையாக உள்ள போதே விடை பெறுகிறேன்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஒரு கபடு வாராத நட்பு

அபிராமி அம்மைப் பதிகத்தின்,முதல் பதிகத்திலேயே ,இரண்டாவது வரியிலேயே ஓர் கபடு வாராத நட்பு என்று திரு அபிராமபட்டர் குறிப்பிடுகிறார். இது போன்ற தெய்வத் துதிகள் புனைவோர் எழுதுபவை சாதாரண மனநிலையில் இருந்து எழுதப் பட்டவை அல்ல. உயர்ந்ததொரு நிலை. அவை தெய்வ வாக்குகளே. ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. ஒரு பிறவியில், சர்க்கரைக்  குன்றை சாப்பிட ஆவலுறும் எறும்பு போல,  அணுவளவு சுவைக்கலாம். எப்போதுமே, கபடில்லா நட்பு என்ற இந்தப் ப்ரயோகம் என்ன சொல்ல வருகிறது என நான் யோசிப்பேன். அப்படி ஒரு நட்பு பாராட்டினால்தான் அதை உணர்தல் சாத்தியம் என்று தோன்றும். தான் உணராத ஒன்றை எழுத முடியாது. அப்படிப்பட்ட எழுத்து இதயம் தொடாது. அபிராமபட்டர், கலையாத கல்வி, குறையாத வயது, கன்றாத வளமை, குன்றாத இளமை , சலியாத மனம்,  தாழாத கீர்த்தி,  மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை,  ஒரு துன்பம் இல்லாத வாழ்வு,  என்று சாமானியர்களுக்கு அடைய மிகக் கடினமான ஒரு பட்டியலில், உச்சியில் கொண்டு வைக்கிறார் ஒரு கபடு வாராத நட்பை. இவை எல்லாம் தர வேண்டி அன்னையைப் ப்ரார்த்திக்கிறார். அப்படியென்றால் என்ன தெரிகிறது? கபடு வாரா நட்பு அடையக்  கொடுத்து வைத்திருக்க வேண்டும் என. அடைய மட்டும் இல்லை. தரவும். இங்கு கொடுப்பதே திரும்ப வரும்.

நட்பு எந்த இரு ஜீவன்களுக்கு இடையேயும் நிகழலாம். பொதுவாக,  முன் அறிமுகம் இல்லாத, ரத்த சம்பந்தம் அற்ற, இருவருக்கிடையே, காரணம் அற்றுத்  துளிர்க்கும் பாசத்தையே நட்பு என்கிறோம். ஆனால் நட்பு இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஏற்படலாம். கண்ணனைத் தோழனாய்க் கண்ட மஹாகவி போல. கணவன் மனைவி, பெற்றோர் குழந்தைகள், சகோதரர்கள்,  குரு சிஷ்யன் எந்த இருவரும் நட்புறவாடலாம். நட்பு பாராட்டும் விதமான இயக்கமே உலக இயல்பு. ஆனால்,அபிராமபட்டர் கூறின கபடில்லா நட்புதான்,  தொடர இயலும். மேலே குறிப்பிட்ட ஒரு ஜோடியை எடுத்துக் கொள்வோமே! நண்பர்களாய்த் தொடங்குகிறார்கள், கல்யாணத்தால் இணைந்து கணவன் மனைவி ஆகிறார்கள். நட்பு ஆழமல்லவோ ஆக வேண்டும்!  ஆகிறதா? கபடு என்றால்,  ஏதோ பெரிய சூது மட்டும் இல்லை. ராவணன் சீதா பிராட்டியைக் கவர்ந்து செல்ல, சகுனி பாண்டவர்களை ஒழிக்க செய்தவை மட்டும் சூது இல்லை. சகோதரனை சொத்து விஷயமாய் ஏமாற்றுவதும், பெற்றவர்களை ஏமாற்றுவதும் சூதுதான். தன்னை மிஞ்சின சிஷ்யனைக் கண்டு மனம் வெதும்பும் ஆசான் செய்வது மனத்தால் செய்யும் சூது. குரு துரோகம் சூது. கணவனை அவன் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது சூது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்கிறார் திருவள்ளுவர்.மனத்தில் மாசற்றிருப்பதே கபடில்லாமை. மாசு என்றால் எவை என்றால் மறுபடி பட்டியல்தான் இட வேண்டும்.

நட்பு அழகிய சொல்.நட்பே வாழ்வை இயக்குகிறது. நட்பும் கபடும் ஸ்ரீதேவியும் அவள் தமக்கையும் போல. சேர்ந்து வாசம் செய்ய முடியாது. மனதில் கபடம் தோன்றும் நேரம் அன்பு, புரிதல், பொறுமை, என்ற பல நல்ல குணங்கள், " நீயே இந்த மனசில் இருந்து கொள் .உன்னுடன் சேர்ந்தால் எனக்கு மூச்சு முட்டும்" என்று அந்தக் கபடிற்கு இடம் கொடுத்து விட்டு வெளியேறுகின்றன. இப்போது நட்பு என்ற சொல்லுக்கு,உண்மையான,வெறும் தோழர்களாக மட்டும் உள்ளவர் பார்வையில் இருந்து ஞாயம் செய்து விடுவோம். மேலே குறிப்பிட்ட எல்லாரையும் விட பலபடிகள் மேலானது இரு நண்பர்களுக்கிடையே நிலவும் நட்பு . ஏன்? உறவுகளைப் பிணைக்கும் வலிமையான சங்கிலிகள் கிடையாது. ஒருவனையோ ஒருத்தியையோ ஏன் அவ்வளவு பிடிக்கும் என்பதற்கு காரணம் கிடையாது. மனத்தில் முதல் இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய  உரிமைகள் கிடையாது. என் தோழன்  எனக்கு எல்லாவற்றையும் விட மேல்தான் என்று கூற தைரியம் கிடையாது.....இப்படி பற்பல கிடையாதுகளைத் தாண்டி நட்பில் காலம் பூர இருக்க வேண்டும் என்றால் எப்படி கபடு எட்டிக் கூடப் பார்க்காமல் மனஸ் தெளிந்த நீரோடையாய் இருக்க வேண்டும்!!!

நட்பு,உயிர்  இருக்கும் வரை தொடர்ந்தால், அதில் கபடில்லை. நல்ல நட்புகள் மனசில் சேர்ந்தே இருக்கும். வேண்டாத எண்ணங்கள் மனதை ஆக்ரமித்தால் வெள்ளைத் துணியில் பட்ட சிறு கரை போலத்தான். அதை வெள்ளைத்துணி என்று கூற இயலாது. இந்தக்  கட்டுரை  மூலம் என் நட்புகளுக்கு நன்றி. நட்பிற்கு ஒரு கௌரவம்  உண்டு. பிரபஞ்சத்தில் ஒரே மாதிரி மனிதர்கள் இருவர் இல்லை. ஏதேனும் வேறுபடும். ஒரே மாதிரி இரண்டிருந்தால் அதன் தேவை என்ன?  .யாருடனானாலும் ஒரே எண்ணம் கொண்டிருப்பது மட்டும் நட்பில்லை. வள்ளுவர் நட்பு என்ற அதிகாரத்தில் கூறுகிறார்,

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

நட்பில் உயர்வு தாழ்வில்லை.இவர் எனக்கு இன்ன தகுதி உடையவர், என்று பிறருக்கு சிறப்பித்து சொன்னால் கூட நட்பின் தன்மை மாசுபட்டு விடுகிறது என்கிறார். நட்பில்  கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பிணைப்பது மெல்லிய நூல். ஆத்ம நட்புகளுக்கு நூல் மிக வலிமையானது.



வெள்ளி, 6 ஜனவரி, 2017

வேகத்தடைகள்

பயணத்தின் போது பல வேகத்தடைகளைத் தாண்டிப் போகிறோம்.விபத்துக்கள் தவிர்க்கப் பட வேண்டி,போடப் பட்ட வேகத்தடைகள்.அரசும் நெடுஞ் சாலைத் துறையும் அந்த கைங்கரியத்தைச் செய்கின்றன .நாம் நலமாக destination அடைய யாரோ செய்யும் உதவி.வாழ்க்கைப் பயணத்திற்கும் வேகத்தடைகள் தேவை.அவற்றை அனிச்சையாக யாரோ நமக்குப் போடலாமே தவிர அக்கறையாக,பெரும்பாலும் பெற்றோர் தவிர யாரும் போட மாட்டார்கள்.வாழ்வோ நீண்ட பயணம்.கால்வாசி தூரம் தடை போட்ட பெற்றோர் மறைந்து விடுகிறார்கள்.எனவே எஞ்சின தொலைவைக் கடக்க,கட்டுப் பாடுடன் கடக்க நாம்தான் அதைச் செய்ய வேண்டும்.காமம்,க்ரோதம்,ஆசை,மனச் சோர்வு,சந்தேகம்,பயம் ,சுய பச்சாதாபம் ,வீண்பெருமை,தற்புகழ்ச்சி,வழுக்க வைக்கும் பாசம்,பொறுமையின்மை,வஞ்சகம்,கடுமை,லோபம்,அனைத்திற்கும் காரணமான தான் என்ற மகத்துவம் ஆங்கிலத்தில் ஈகோ இவையெல்லாம் வாழ்க்கை நமக்களிக்கும் விபத்துகள்.எழுதாமல் விடப்பட்டவையே அதிகம்.எத்தனை தடைகள் தேவை,பாருங்கள்.ஆனால் போட வேண்டிய இடத்தில் தடை போடாமல்,நம் நல்ல இயல்புகளுக்கு நம்மை அறியாமல் தடை போட்டுக் கொள்கிறோம்.பரிதாபம்!

முறைப்படுத்தப் பட்ட காமம் இப்போது இல்லை.க்ரோதத்தை ஹெல்த்தி காம்பெடிஷன் என்று தப்பாக நினைக்கிறோம்.பேராசையை,நல்ல ஆசை என சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.மனச்சோர்வில் ஒரு சுகம் காண்கிறோம்.அனாவசியமாய் சந்தேகம் கொள்கிறோம்.அதனால் என்ன பலன்?சரி யாரோ ஏமாற்றி விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம்.அது ஏமாற்றியவனை அல்லவோ உறுத்த வேண்டும்?அதற்கும் மேலே யோசித்தால் எது ஏமாற்றம்?மாறும் வாழ்வில் நாம் நினைப்பது எது மாறினாலும் ஏமாற்றம்.அதற்கு எப்பவும் தயாராய் இருப்போம்.சந்தேகப் பட்டு சந்தோஷம் தொலைக்காமல்,வரும் போது பார்த்துக் கொள்வோம்.அடுத்து பயம்.இது பெரிய எதிரி.தோல்வி பயம்,மரணபயம்.உலகின் பார்வை பற்றின பயம் இவை தலையாயவை.எப்போதும் ஜெயிக்க முடியாது.தோற்று விடுவோம் என பயந்தால் தோற்றுத்தான் போவோம்.தோல்வி,வெற்றி என்பதெல்லாம் relative terms .எப்போதும் செய்திகளில் முதல் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெற்றி அடைந்தவர்கள் என்று சொல்ல முடியாது.மரணபயத்தை வெற்றி கொள்வது கஷ்டம்.பேச எனக்கு qualification இல்லை.உலகின் பார்வையில் நன்றாக,நல்லவனாக இருப்பது வேறு.உண்மையாய் இருப்பது வேறு.உண்மை பயப்படாது.இது போன்றவைதான் மற்ற மேலே குறிப்பிட்ட விபத்துகள்.மற்றவை பற்றின detailed analysis தேவை இல்லை.எனக்கும் தெரியும்,உங்களுக்கும் தெரியும்.வாழ்வின் வேண்டாத வேகத்தைக் குறைக்கும் தடைகளை யோசிப்போம்.

உள்ளது ஒன்றுதான்.அதை எல்லோரும் கூறிவிட்டார்கள்.முடிந்த கருத்து.அனுபவப் பட்டவர்கள்,சொன்னதை மறுபடி ஆராய்ச்சி செய்வதும்,நம் சிற்றறிவு கொண்டு இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் intellectual ,mental level ல் யோசிக்க மட்டுமே முடியும்.சேரவேண்டிய இடம் தெரியும்.பாதையை செப்பனிடுவதுதான் செய்ய வேண்டியது.செப்பனிடும் போது வேகத்தடைகள் போட்டுக் கொள்ள வேண்டியதாகிறது.எதெல்லாம் சலனம் தருமோ அதெல்லாம் கவனத்துடன் கையாள பட வேண்டியவை.இந்த இடத்தில் தடை தேவை என மனம் உணரும்.உடனே போட்டு விட வேண்டும்.சிலர் போராளிகள்.அவர்கள் புறம்தள்ளுவதை ஒரு முறையாகக் கொள்கிறார்கள்.Movement of REJECTION .மறுபடி மறுபடி,எத்தனை கஷ்டமாக இருந்தாலும் வேண்டாத எண்ணம் அகலும் வரை போராடி வெற்றியும் பெறுவோர் உண்டு.மற்றொரு வகையினர் உண்டு.வேண்டாத எண்ணங்களை மறுத்தல்.மன ஆழத்தில் இருந்து மறுத்தல்.DENIAL .உண்மையான புரிதலுடன்,நம்மை விட சக்தி வாய்ந்த ஒரு ஒளியின் துணை கொண்டு,வேண்டாம் என்பவற்றை வேரறுத்தல்.முதல் வகையில் நிகழ்ந்தது போர்.WAR .இரண்டாம் வகையில் நடந்தது முழு மாற்றம்.TRANSFORMATION .போர் மறுபடி என்றேனும் ஏற்படலாம்.வேரறுக்கப் பட்ட கெட்ட மரம் துளிர்ப்பதில்லை.எத்தனை பெரிய வண்டி மோதினாலும் உடையாத STRONG SPEED BREAKER .

கஷ்டங்கள் இல்லாத உலகம் இல்லை.இருந்தாலும் வெறும் இனிப்பை இலையில் வைத்து சாப்பிடுவது போல் இருக்கும்.அதனால்தான் கடவுள் நம் தாங்கும் சக்திக்கேற்ப நம்மை சோதிக்கிறார்.இருமைகள் இல்லையேல் சுவை இல்லை.இருமைகளைக் கடப்பதுதானே சுவாரஸ்யம்.முயல் ஆமை கதையில் இறுமாப்பால் முயல் ஓய்வெடுத்தது .தோற்றது.அப்படி இல்லாமல்,ஒரேயடியாய் தாமஸப் படாமல்,அவ்வப்போது நிதானப் பட்டு பயணிப்போம்.வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாகப் பயணப் படுவோம்.முக்குணங்களில் தமஸ் அக்ஞான இருளில் பிறப்பது.அசட்டையாக இருப்பதும் அமைதியாக இருப்பதும் வேறு.முயற்சி அற்று இருப்பதை,மதிமயக்கத்தால் விட்டேற்றியாய் இருப்பதை சிலசமயம் நாம் சாத்வீகமாக உள்ளதாய் தப்பாகக் கணக்கிடுகிறோம்.ஆனால் அது விலக்க வேண்டிய தமோ குணமே.செய்வதை சிறப்பாக செய்வதும்,எப்போதும் எண்ணம்,வார்த்தை செயல் உண்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் செய்தாலே உயர்ந்த அனுபவங்கள் ஏற்படும் என்று தோன்றுகிறது.Break போடப் போகிறேன்,போஸ்ட்டுக்கு.காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை ஒரே நாளில் பயணிப்பது போல இவ்வளவு நீள போஸ்ட் boring இல்லை?பயணிக்கலாம்,விட்டு விட்டு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

CELEBRATION--LIFE IS A CELEBRATION

MOTHER PROTECTS

புது வருஷ வாழ்த்துக்கள்.நாங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறோம்.120 வீடுகள் இருக்கும்.புதுவருஷக் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான பரிணாமம் கொண்டுவிடுகின்றன.மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட மேடை.மைக் செட்.ஸ்பீக்கர்.உணவு அளிக்கும் (காசு கொடுத்தால்தான்)ஸ்டால் ,அலங்கார பொருள்கள் விற்பனைப் பிரிவு ,தம்மை முன்னிலைப் படுத்தி காட்ட கூடிய உயர்தர உடை அணிந்த ஆண்,பெண்,குழந்தைகள்.சமீபத்திய திரைப்படங்களில் இருந்து குத்துப் பாட்டுகள்,அதுவும் அதிகபட்ச வால்யூமில் ,அதற்கேற்ப நடனமாடிய தோழர்கள் ......கொண்டாட்டம்தான் போங்கள் .மகிழ்ச்சி தொற்று .சந்தோஷமான சூழ்நிலை நம்மையும் மகிழ்வூட்டுகிறதுதான்.ஆனால் எவ்வளவு நேரம் தொடர இயலும்?தேடல் வெளியே நடந்து கொண்டுள்ள வரை ,கமா போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.புள்ளி வைப்பது அவசியம்தானே ?இல்லை என்றால் ,முடிவு தெரியா நாவல் போல குறுகுறுப்பாக இருக்கும் அல்லவா?நாம் இருக்கிறோம்.நமக்கு உள்ளே ,வெளியே என இரு இடங்கள்.மகிழ்ச்சியை வெளியே தேடுகிறோம் என்றால்,உள்ளே அது இல்லை என்பதே பொருள்.இன்னும் துல்லியமாகச் சொன்னால் ,தேடல் நடக்க வேண்டியது வெளியேதான் என்று முழுமையாய் நம்புகிறோம்.பொன்னையும் பொக்கிஷத்தையும் பூமிக்கடியில் புதைத்து விட்டு,வீட்டு அலமாரியில் தேடினால் அகப்படுமா?

விழாக்கள்,பண்டிகைகள் மட்டும் கொண்டாட்டமா?இருப்பே கொண்டாடப் பட வேண்டிய ஒன்றுதானே!காலை கண் விழித்தால் ,நான் இன்று இருக்கிறேன் என்பதே பெரிய விஷயம் அல்லவோ? ஆனால் சொல்லும் அளவு உள்தேடல் சுலபமில்லை.நல்ல மாற்றங்கள் ஏற்படும்,அவ்வப்போது.ஆனால்,அவை irrevocable ஆக இருப்பது கஷ்டம்.தேடல் பெரும்பாலும் பெரிய catastrophes நடந்த பின் ,பெரிய வலிகளுக்குப் பின்னரே தொடங்குகிறது.நாம் ஏன் இங்கு உள்ளோம் என்ற எண்ணம் வந்தால் நல்லது.அதுவே அடிப்படை.பள்ளி சென்றால் அது படிக்க,குளியலறை சென்றால் குளிக்க,கடைக்கு சென்றால் சாமான் வாங்க,திரையரங்கு சென்றால் கேளிக்கைக்காக,கோவில் சென்றால் சாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ள ,உணவகம் சென்றால் சாப்பிட என்று ஒவ்வோர் இடத்துக்குச் செல்லவும் நமக்கு காரணம் தெரியும் போது உலகத்திற்கு வந்தது எதற்கு என அறியாமல் போய்ச் சேரலாமா?

நேற்று கொண்டாட்டங்களின் போது அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.Obvious ஆக food stall அருகில்.அந்தப் பெண்ணால் காசு செலவழித்து எந்த உணவும் வாங்க இயலாது.ஏனெனில் அந்த ஒரு நாள் கூத்துக்கு செலவழிந்த மின்சாரத்துக்கு சேர்த்துதான் சோளா பூரிக்கு ரேட் .அவள் எங்கே போவாள்,பாவம்!சீதையைக் கவர நடந்த மாரீச மான் போல,சாப்பிடுபவர்களின் கவனம் ஈர்க்க அக்குழந்தை நடை போட்டது.சீதா ப்ராட்டி தெய்வம்.எளிய மானுட வடிவெடுத்த தெய்வம்.காலமோ வால்மீகி  காலம்.மாரீசனை மான் என நம்பினாள் .நாமோ டெக்னாலஜியைக் கைக்குள் வைத்திருக்கும் உயர்மட்ட மனிதர்கள்.அக்குழந்தைக்கு உணவைப் பார்த்து ஆசை வரும் என்பது போன்ற விஷயங்களைக் கூட மனதால் யோசிப்போமா?தெரிந்த வழியையே GOOGLE MAP  அல்லவா சொல்ல வேண்டும்!நம் முழங்கால் உயரம் கூட இல்லாத சிறு மனிதன் ,அவனா முக்கியம்,2017 ஐ வரவேற்பதை விட?இயேசு கிறிஸ்து அவதரித்து 2017 ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்னும் 2000 ஆண்டுகள் போகட்டும்.இன்னொரு அவதாரம் வேண்டுமானாலும் நிகழட்டும்.நான் தேடிச் சோறு நிதம் தின்று,சின்னஞ் சிறு கதைகள் பேசி வேடிக்கை மனிதனாக கதையை நடத்தி விட்டுப் போகிறேன்.வருத்தமாக இல்லையா?ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் கேள்வி எழும் .கேள்வி வந்தால்தான் பதில் யோசிக்கத் தோன்றும்.

ஏன் காதைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்?ஏன் பாடம் பெற வாழ்க்கையில் அடி வாங்க வேண்டும்? வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பாடமல்லவா?எத்தனை மஹான்கள் நடந்த வழித் தடங்கள் கண் முன்னே தெரிகின்றன.Is it not very easy to be a follower than be a leader? கேளிக்கைகள் தவறில்லை.ஆனால் கால அவகாசத்திற்குட்பட்டவை.அன்று மேடையில் ஒரு நடிகரை இமிடேட் செய்து ஒரு சிறுவன் ஆடினான்.உலகமே நாடக மேடை.நாடகத்திற்குள் ஒரு நாடகம்.என்ன பயன்?கேளிக்கைகள் மூலம் ஏதேனும் செய்தி சொன்னாலாவது தேவலை என்றிருந்தது.நித்தம் நம்மை அமைதியாக,ஆனந்தமாக வைத்துக் கொள்ளத்தான்,கொஞ்சம் நேரம் செலவழித்து சிந்திக்க வேண்டும்.Celebration சந்தோஷம் .Life முழுமையும் celebration ஆனால் நிரந்தர சந்தோஷம் .ஆமாம், நிரந்தரம் என்று பேச எது உள்ளது?ஒரு இடைச் செருகல்.அடுத்த போஸ்ட்டின் வித்தும் கூட.அந்தக் குழந்தைக்கு,மாரீச மானுடன் ஒப்பிட்டேனே அந்தக் குழந்தைக்கு சிலர் சாப்பிட ஏதோ வாங்கித் தந்தனர்.அவர்களுக்கு என் மன ஆழத்தில் இருந்து வணக்கம்.ஆனால் அன்ன தானம்தான் சிறப்பு என்கிறார்களே,அதில் என்னால் உடன்பட முடியவில்லையே?போதும் என சொல்ல வைக்கக் கூடியது என்கிறார்கள்.சரிதான்.ஆனால் அந்த வேளைக்கு மட்டும்தானே வயிறு போதும் என்று கூறும்.?அடுத்த பசி?So வேறு ஏதோ தானம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்.நீங்களும் யோசியுங்கள்.நானும் யோசிக்கிறேன்.மறுபடி பார்க்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS