புதன், 17 மே, 2017

வாழ்க்கை கதையின் நாயக நாயகிகள்

அவரவர் வாழ்க்கையின் கதாநாயகன்,கதாநாயகி அவர்கள்தான்.பூமிக்கு நடிக்க வந்த நொடி நீண்ட வாழ்வெனும் நாடகத்தின் முக்கிய பாத்திரமாகி விடுகிறோம்.கதையில்,சினிமாவில்,நாடகத்தில் ஹீரோ நல்லவன்.அவனுக்குத் துணை போவோர் எல்லோரும் நல்லவர்.வில்லன்கள் இருப்பார்கள்.ஹீரோவுக்கு எல்லோருடனும் தொடர்புண்டு.ராமாயணக் கதையின் நாயகன் உண்மையான ஹீரோ.அவன்தான் உண்மையில் ஹீரோ. "நீ என்ன ராமனா" என்ற வழக்கு நமக்குத் தெரியும். ராவணன் வாழ்வில் அவனே ஹீரோ.ராமன் யாரையும் விரோதியாய் நோக்கவில்லை.தசரத மஹாராஜா வனம் போகக் கட்டளை பிறப்பித்த போதும் அவன் முகம் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது என்கிறார் கம்பர்.நிஜப்பூ வாடும்.சித்திரப்பூ வாடாது.கைகேயி,மந்தரை,சூர்ப்பணகை ,சுக்ரீவன்,குகன்,விபீஷணன் என்ற ஆயிரம் ராமாயணக் கதாபாத்திரங்களில் யாருடனும் ராமனுக்கு துவேஷம் துளியும் இல்லை.நல்ல ,அல்லாத பல பெயர்களை சேர்த்துச் சொல்லுகிறேன்.துவேஷம் அல்லாதது மட்டுமில்லை.எல்லோரிடமும் ஒரே பார்வை இருந்தது.கருணை இருந்தது.ராவணன் மட்டும் செய்யக் கூடாத மாபாதகம் செய்து ஸ்ரீ ராமனால் வதம் செய்யப்படுகிறான்.சூட்சுமமாகப் பார்த்தால் அவன் மோட்சத்தை நல்கின பெரும் கருணை ராமனுடையது.

நாம் அனைவரும் மனதில் வில்லன் போல் யோசித்து ஹீரோ போல் வாழ எண்ணுகிறோம்.அது நடக்காது.பிறரால் நமக்கு சங்கடங்கள் ஏற்படுகின்றன.உண்மைதான். "அரண்மனையை விட்டுக் காட்டுக்குப் போ" என்றால் சங்கடம் இல்லையா? நேற்று வரை பாசம் பொழிந்த அன்னை கைகேயியின் பாராமுகம் சங்கடம் இல்லையா? ராமாயணக் கதை ஓரளவு அறிந்தவர்கள்,சங்கடம் தரும் மனிதர்களை எதிர்கொள்ளும் போது தன்னை ராமனாக எதிரே உள்ளவரை அன்னை கைகேயியாக நினைத்துக் கொண்டால் மனசு கலங்காது.எந்த நல்ல விஷயம் கேட்டாலும்," சொல்லி விடலாம்,செய்வது கடினம் " என்றே ஒதுக்கி விடுகிறோம்.தப்பு.முயன்றால் முடியும்.முயலவே மனம் இல்லையென்றால் எப்படி? இன்னொன்று,நம் ஒவ்வொரு அணுவிலும் நேரான எண்ணங்கள் நிறைந்தாலொழிய உண்மையான அமைதியை நாம் அனுபவிப்பது சாத்தியம் இல்லை.நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வரை அமைதி இன்ஸ்டால்மென்டில்தான் கிடைக்கும்.பணம் எனக்கு பொருட்டல்ல என்போம்.மனசின் ஆழம் கணக்குப் போடுவோம்.அம்மா மாதிரிதான் மாமியார் என்று மற்றவரை ஏமாற்றுவோம்.மனசாட்சி வெளியே தெரியாமல் சிரிக்கும்.நாம் மற்றவருக்குத் தரும் அழுத்தம் நமக்குத் தெரிவதில்லை.கைகேயியால் ராமனுக்கு ஸ்ட்ரெஸ் தர முடியவில்லை.ராமனோ கைகேயிக்கு ஸ்ட்ரெஸ் தர நினைக்கவே இல்லை.அவன் முகம் ஏன் மலர் போல் இருக்காது?நம் முகம் எப்படி மலர்ந்திருக்கும் ?

நாம் நம்மைப் பற்றி முதலில் முழுமையாக அறிய வேண்டும்.அதை செய்யாமல் பிறர் செயல்களில், வாழ்வில் தலையிடுவதில் அர்த்தமில்லை.மற்றவர் என்னை எப்படி நடத்துகிறார்கள் அல்லது நடத்த வேண்டும்,என்பதை விட,யார் நம்மை எப்படி நோக்கினாலும்,நடத்தினாலும் நான் ராமன் போலத்தான் இருப்பேன் என்று நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளலாமே? அப்போது ,நம் மனம் நம்வசப் படும் போது,மற்றவர் தரும் எந்தத் துன்பமும் நம் முன் செயல் இழக்கின்றன.ராவணன் வில்லன்.மற்றவரால் நம் வாழ்வு நடத்தப் பட்டால் நாம் வில்லன்தான்.மற்றவர் பேச்சு கேட்டு ஆசைவயப் படுதல் ,மற்றவர்களை நம் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து பலியிடுதல்,நல்லோர் சொல் அவமதித்தல் இன்னும் பல.கைகேயியும் விதிவசத்தால் இந்தக் குற்றங்கள் அனைத்தும் செய்தாள்.நாம் கதாநாயகனா வில்லனா என்பதை நமக்கு நாமே நிர்ணயித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகளே தீர்மானிக்கின்றன. ஹீரோ,வில்லன் எல்லோருக்கும் வாழ்வு சந்தோஷம் ,சங்கடம் இரண்டையும் தரும்.வேறுபடுவது அவரவர் பார்வை.அனைவரும் ஹீரோவாகவே பிறக்கிறோம்.அதே போல் வாழ்வது, Conscious Practice ,Constant Vigilance  இவை இருந்தால்தான் முடியும்.நம்மால் முடியும்.ராமாயணம் படித்தேன்,கேட்டேன்,தொலைக்காட்சியில் பார்த்தேன் என்பவர்களால்  முடிய வேண்டும்.முயற்சி செய்வோம்.ஓரடி வைப்பதும் நலமே.நெடிய,நல்ல பயணங்கள் அவ்வாறுதான் ஆரம்பிக்கின்றன.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 13 மே, 2017

Don't handle with care

கவனத்துடன் கையாளவும் என்ற வாசகத்தைப் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.உண்மையாகச் சொல்லுங்கள்,அந்த வாசகம் உங்களை சற்று டென்ஷன் ஆக்குகிறதா இல்லையா?என்னை ஆக்குகிறது.இது சாதா விஷயம் இல்லை.எங்கெல்லாம் அந்த வாசகம் பார்க்கிறோம்?கண்ணாடி,பீங்கான் சாமான்கள் Delicate சமாச்சாரங்கள் இருக்கும் இடத்தில்தானே ?ஏன் எச்சரிக்கப் படுகிறோம்?கொஞ்சம் கவனம் தப்பினாலும் மறுபடி சரி செய்ய இயலாத அளவு Damage ஆகி விடும்.நீங்கள் எல்லாம் எப்படி தெரியாது.நான் அவை பக்கமே திரும்ப மாட்டேன்.எதற்கு வம்பு?கவனம் நல்ல குணம்தான்.ஆனால் எப்போதும் ஏதோ Sindhbad and the sailor போல ஜாக்கிரதை உணர்வை மூட்டை போல மனசில் சுமக்க இயலாது.அவசியம் இல்லையே.கண்ணாடியுடன் புழங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்,அல்லது carefree ஆக இருக்கணும்.உடைந்தால் உடையட்டும்.அதன் தன்மை உடைவது.நான் உடைக்கலை என்றால் வேறு யாரோ கைதவறி போடும் போது உடைந்தே தீரும்.சாதாரணமாகப் பயன்படுத்துவோம்.உடையாமலே இருக்கவும் 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதே ?அதிக ஜாக்கிரதை அழுத்தம்.நான் கண்ணாடி கையாள விரும்பாமைக்குக் காரணம்,எனக்கு அழுத்தம் பிடிப்பதில்லை.உடைப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது என்னால் இயலவே இயலாது.தூர இருந்து ரசிப்பதுடன் சரி.

மனிதர்களில் கண்ணாடிப் பாத்திரம் போன்றவர் உண்டு.அவர்களுடன் பழகுவது கொஞ்சம் கஷ்டமே.பலர் தள்ளியே இருப்பார்கள்,அவர்களிடம் இருந்து.ஆனால் அந்தக் கண்ணாடி மனிதனோ பெண்ணோ நாம் அவசியம் தொடர்பில் இருக்க வேண்டிய நபரானால்,என்ன நடக்கிறது?எப்படிக் கையாளலாம்?ஏற்கெனவே கூறி விட்டேன்.இது டயரி.என்னைக் கண்ணாடிப் பாத்திரமாக எண்ணிக் கொண்டு ஒரு பார்வை.மனிதரில் பல நிறங்கள், "இது ஒரு விசித்திர வண்ணம் "என்று எண்ணிக் கொண்டு  நட்பாக இருக்கலாம்.ஏதும் பிரச்சினை வந்தால் வரும் போது எதிர்கொள்ளலாம்.ஆனால் எப்போதும் ஜாக்கிரதையாகவே அவர்களிடம் நடந்து கொண்டால் அதை மனம் உணர்கிறது. மொழி ஏதும் இன்றி ஏதோ குறைவதாக உணர்கிறது.பயம் கலந்த அன்பாக அது அவர்களை அடைகிறது..Delicate ஆக இருப்பது மற்றவரை பயமுறுத்தும் விஷயமா?ஏன் அப்படி? முதலில் கூறினாற்  போல் தேவை இல்லை என்றால் சுத்தமாக விலகி இருக்கலாம்.ஆனால் கடவுள் ஆன்மாக்களை இணைத்திருந்தால்?பயத்துடன் அணுகுவது அவஸ்தை அல்லவோ? ஒரு நிமிடம் கூட இயல்பை வெளியிட முடியாத அவஸ்தை.எதற்கு? நாம் இயல்பாய் இருந்தால் கண்ணாடி மனிதர்கள் முதலில் கஷ்டப்பட்டாலும்  என்றேனும் மாறலாம்.இயல்புக்கு மாறாய் ஜாக்கிரதை உணர்வு பிரதானமாக செயல்பட்டால் இரு சாராருக்கும் கஷ்டம்.அது திரை.கண்ணால் பார்க்க இயலாத திரை.

பொருள்களைக் கையாள கவனம் தேவை.மனிதர்களுடன் பழகவும் கவனம் தேவையே.ஆனால் உணர்வு குறுக்கீடு என்று ஒன்று உண்டு.கண்ணாடி உடைந்தால் ஒட்டாது.வறட்டு வைராக்கியங்கள் அற்ற மனித மனம் மாறலாம்."மிக கவனத்துடன் பழகவில்லையெனில் ஆபத்து" என்ற பிரிவு மனிதர்களை ,தொடர்பில் வைப்பது தேவை இல்லை எனில்,உறுதியாக மனசு, வாழ்வில் இருந்து விலக்கி விட வேண்டும். ஆனால் தவிர்க்க இயலாது வாழ்வில் இணைந்த உறவுகளை,Please,don't handle with care.ஆமாம் எதெல்லாம் தவிர்க்க இயலாத உறவுகள்? தன் இருப்பை விட இல்லாமையால் நம்மை நெருக்கமாக உணர வைப்பவர்கள்,நம் சந்தோஷங்கள் மட்டும் இன்றி வருத்தங்களையும் உணர முடிபவர்கள்,அன்பை கொடுக்கல் வாங்கல் என்ற வட்டத்துக்குள் அடக்காதவர்கள் ,யார் இல்லை என்றால் பாட்டரி இழந்த கடிகாரம் போல் இயக்கமே கேள்விக்குறியாகுமோ அவர்கள்,எந்த நிலையிலும் நம்மை விட்டுத் தராதவர்கள்.......இவர்கள் எல்லாம் தவிர்க்க இயலா உறவுகளே. யாருடைய அருகாமையில், நான் தனியாக இருந்தால் எப்படி இருப்பேனோ அப்படி இருக்க முடியுமோ அவர்கள்தான் என்னைப் பொறுத்தவரை நெருக்கமானவர்கள். அவர்களுடன் மட்டும் தொடர்பிருந்தால் போதும்.ஆனால் நாம் அப்படி நினைக்கும் நபர் அதே போல் நினைத்தால் Equation =  .  இல்லை எனில் நமக்கு அமைதி உண்டென்றாலும் Harmony missing தான். இறைவன் சமப்படுத்த வேண்டிய Equations !

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 4 மே, 2017

விசா,பாஸ்போர்ட் இன்றி செல்லக் கூடிய உலகங்கள்----செல்வது அவசியமா?

போஸ்ட் வரவர டயரி எழுதுவது போல் ஆகி விட்டது.தோன்றுவதை பதிவு பண்ணுகிறேன்.மற்றவர் டயரி படிக்கும் ஆசை இருந்தால்இதையும் படிப்பீர்கள் .ஆனால்," என் டயரி இந்தா படி" என்று ஒருவர் கொடுத்தால் படிக்க நேரம் தவிர, வேறு உணர்ச்சித் தடைகள் இருக்காது.நேற்று ஆவின் ஜங்க்ஷன் போய் இருந்தேன்.எல்லாரும் பூங்காவை வாக் என்ற பெயரில் சுற்றி விட்டு இழந்த கலோரிகளை திரும்பப் பெறாமல் வெளியே போனால் ஆவின் நிர்வாகம் கோபிக்குமோ என்ற பயத்தில் நாம் வீட்டில் நாலு பேர் சாப்பிட காய் எடுத்து வைக்கும் அளவு பெரிய பௌலில் விதம் விதமாய் ஏதேதோ ஆவின் ப்ராடக்ட்ஸ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.பிஸ்ஸா மணம் நாசியை நிறைத்தது.மூக்கு வழி மூளைக்கு எதிர் திசையில் பயணித்த அந்த மணம்தான் போஸ்டின் மூலம்

பூலோகம் அதாவது பூமி மட்டும் நமக்கு தெரிந்த இடம்.மேல் உலகம்,பாதாள லோகம்.சத்ய லோகம்,தேவ லோகம்,சந்திர மண்டலம் என்று பிரபஞ்சம் நாம் அறியாத பல உலகங்களையும் உள்ளடக்கியது.அந்த உலக நடப்புகள் நமக்குத் தெரியாது.தெரியாதவரை நம் நினைவுகளில் குழப்பம் இருப்பதும் இல்லை.நன்கு அறிந்த ஒன்றும் ஏதும் அறியாத வேறொன்றும் குழப்பங்கள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை.பிஸ்ஸாவிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது.பிஸ்ஸா சாப்பிட்டதில்லை.அதனால் பிஸ்ஸா ஹட் எனக்கு அறியா உலகத்திற்கு சமம்.சரவணபவன்,முருகன் இட்லிக்கடை எல்லாம் அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.எத்தனை கிளைகள் உள்ளன என்று கூட தெரியும்.எதற்கு சொல்கிறேன் என்றால் பிஸ்ஸா உண்பதின் கெடுதல்களை எடுத்துக் காட்டுவதல்ல நோக்கம். சில பேருக்கு தாஜும் சோளாவும் தெரியும்.தெருமுக்கு கையேந்திபவன் தெரியாது.அது போல ஒரு ஒப்பிடல்தான்.புதுப்புது உலகங்களைத் தேடி மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தோன்றிற்று.ஒரு முறை சென்று,{ஹோட்டலை சொல்லவில்லை,பொதுவாக சொல்கிறேன்}, அதில் ருசி ஏற்படுத்திக் கொண்டால் அதில் இருந்து மீள்வது எளிதல்ல.டாஸ்மாக் உதாரணம்.வேறு பல சொல்வேன்.எல்லோரும் படிக்கும் டயரி என்ற பின் யாரையாவது புண்படுத்தி விடக்  கூடாதே என அச்சம் காரணமாகத் தவிர்க்கிறேன்.

நல்லதிற்கும் இதேதான் நியதி.நல்லதில் ஏற்படும் ருசியும் மறுபடி செய்யத் தூண்டுவதே.இங்குதான் முன் சொன்ன அறிந்த,அறியாத உலகங்கள் பற்றி யோசிக்கிறேன்.ஒரு விஷயம் நாம் அனுபவித்து உணர வேண்டும்.அல்லது அதை நூறு சதவிகிதம் அறிந்தவர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டும்.இதெல்லாம் நல்லது என்று எத்தனை பேர் பட்டியல் இட்டுப் போன பாதைகள் உண்டு.தைரியமாகப் போகலாம். அதை விட்டு இன்று இட்லிக்கு பதில் பிஸ்ஸா சாப்பிட்டு பார்ப்போமா என்று சாப்பிட்டு கண்ணுக்குத் தெரியாத ஆசையின் வசப்பட்டு திண்டாட வேண்டாம். இன்றைய குழந்தைகள்தான் பாவம்.சென்ற தலைமுறை வியப்புடன் பல உலகங்கள் பற்றி கதை கேட்டது.தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய் அவை எல்லாவற்றையும் உள் சென்று நோக்க இந்தத் தலைமுறை படாதபாடு படுகிறது.பெற்றோரின் பேராசைகள்தான் விசா.தொழில்நுட்ப வளர்ச்சி பாஸ்போர்ட்.பாஸ்போர்ட் எடுப்பது ரொம்ப கஷ்டம் இல்லை.விசாவுக்கு போய் நின்றவர்கள் அதன் கஷ்டம் அறிவார்கள்.தாம் விட்டதைக் குழந்தைகள் மூலம் அடையும் பெற்றோர் ஆசை ரெடி விசா.பயணத்திற்கு என்ன தொல்லை?

சில இடங்களுக்கு விசா கிடைப்பது சுலபம்.U S A விசா அளவு கஷ்டமில்லை.பெற்றோரும் அதே போல அளவுகோல் வைத்துள்ளார்கள்.அவர்கள் சரி என்பதை குழந்தைகள் செய்யலாம்.அவர்களே ஆறடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயாதா? கூடாது என்ற சொல் புது உலகம் பார்க்கும் ஆசையை அதிகம் ஆக்குகிறது.அதனால்தான் தோன்றியது அறியா உலகங்கள் இருப்பதில் தவறில்லை என்று. சக்கரம் சுற்றி வரும்.புரிதல் ஏற்படும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 

செவ்வாய், 2 மே, 2017

நேர்பட ஒழுகு

அவ்வையார் ஆத்திச் சூடியில் நேர்பட ஒழுகு என்கிறார்.அப்பீல் இல்லாத விஷயங்கள்தான் ஆத்திச்சூடி முழுமையும்.ஒரு நேர்கோடு போட்டுக் கொண்டு வரும் போது ஸ்கேல் விலகினாலோ நம்மிடம் சிறு அதிர்வு ஏற்பட்டாலோ கோடு தடம் மாறும்.கோணலாகும் .சாக்பீஸ் பென்சில் கோடுகள் தப்பாகும்  போது அழித்து மறுபடி நேராக்கலாம்.பேனாவால் போட்டால் ஒயிட்னர் தேவை.அது இங்க் கரையை மறைக்கும்.ஆனால் கோடு எங்கே தப்பியது என்று முழுமையாய் மறைக்காது.பர்மனன்ட் மார்க்கர் என்ற ஒன்றுண்டு.அதால் கோணல் கோடு போட்டால் பக்கம் வீண்தான். அவ்வயாருக்கு நேர்பட ஒழுகு என உள்ளிருந்து குரல்(என்னைப் பொறுத்த வரை இறையின் குரல் ) கேட்டது.Effortless ஆக எழுதி விட்டார். சாமானியர்களுக்கு பேப்பர் பென்சில் என்று ஆரம்பித்துத்தான் யோசிக்க முடியும்.சரிதானே?

நேர்பட ஒழுகுதல்,பேசுதல் தானாக பிரயத்தனங்கள் இன்றி நடைபெற வேண்டியது.அதன் திரிபு ஆச்சரியம் தருகிறது.ஏன் என்ற கேள்வி தருகிறது.முக்கியமாக,பேச்சு.உதாரணங்கள்."இப்பதான் எங்கள் வீடு வர வழி தெரிந்ததா"என்ற ஒரு வழக்கு உள்ளது.முதல்முதல் இந்த வாக்கியம் கேட்ட போது எனக்கு அர்த்தம் விளங்கவில்லை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். இப்போது தெரியும்.உலகம் இதெல்லாவற்றையும் தெரிய வைத்தே தீரும்.சென்ற வாரம் என் கஸினுக்கு தொலைபேச அழைத்தேன்."என் வீட்டிற்கு ஒருவர் வந்திருக்கிறார்.பேசிக் கொண்டுள்ளேன்.நானே கூப்பிடட்டுமா"என்றான்.இது ஒன்றும் தப்பில்லை.கூடவே," அந்த ஒருவர் உனக்கும் தெரிந்தவர்" என்று கூறி முடித்தது இப்போது தமாஷாக உள்ளது.சில ஆண்டுகள் முன் எரிச்சலாக இருந்தது.நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லத் தேவையில்லை.ஆனால் "உனக்குத் தேவையில்லை என் விஷயம் " என்று அவசியம் தெரியப் படுத்துவதன் நோக்கம் ரொம்ப உயர்ந்ததாகத் தெரியவில்லை.இதைத்தான் கோணல் கோடு என்கிறேன்.மன விகாரம்.நம் செயல்பாடுகள் பிறர் அறியக் கூடாது என்றால் அவை பற்றி வாயே திறவாதிருப்பதல்லவோ உத்தமம்.?

இன்னும் பல.உங்களால் ஒருவருடன் தொடர்பில்லாமல் இருக்க முடியாதா?எளிமையாகத் தொடர்பு கொள்ளுங்கள்.இது வியாபாரம் அல்ல.15 ரூபாய் கொடுத்தால் ஒரு கிலோ தக்காளி என்பது போல.நான் நாலு தடவை உன்னை வந்து பார்த்து விட்டேன்.அடுத்தது உன் முறை என்றால் கோட்டின் ஸ்கேல் நகர்வது எனப் பொருள்.நினைப்பதை மட்டும் வெளிப் படுத்துவதுதான் நேர்மை. ஆனால் நினைவே நேராய் இருப்பதே உண்மை.செம்மை.நீயெல்லாம் என்னைக் கண்டுகொள்ள மாட்டாய் ,என்னுடன் பேச மட்டும் உனக்கு நேரம் கிடைக்காது,இன்னும் நான் இருக்கேனா என பார்க்க வந்தாயா,விமானப் பயணம் கொடுத்து வெச்சிருக்கணும்,வெளிநாட்டு யோகம் உனக்கிருக்கு எனக்கில்லை,......இந்த புலம்பல்கள் எல்லாம் அமைதி தொலைந்ததின் அறிகுறிகளே. பேசுவது புலமையின் தைரியத்தின் அடையாளம் என நினைக்கிறோம்.ஆனால் கேட்பதற்குத்தான் இவை அதிகம் வேண்டும்.நேர்பட யோசித்தால் நேர்படப் பேசவும் செய்வோம்.நேராகப் பேச தொடங்கினால் வார்த்தைகள் குறையும். தானாக மௌனமான நேரங்கள் அதிகரிக்கும்.ஆற்றல் சேமிப்பு ஏற்படும்.நேராகப் பேச யோசிக்க வேண்டாம்.நேரம் மிச்சம்.கோணல் பேச்சுகளை முதலில் மனம் உற்பத்தி செய்து ,மூளை அதை process செய்து நாள் பூரா இயங்கும் வாய் அவற்றை உமிழ்ந்து என கிட்டத்தட்ட ஒரு இண்டஸ்ட்ரியே இயங்க வேண்டும்.

இன்னும் பற்பல அதிர்ச்சிகள் அனுதினம்.ஆனால் அதிர்ச்சி ஏற்படுவது நம்மிடம் ஒளிந்து கொண்டுள்ள குறைகளை, நாமே அறியாது பதுங்கி உள்ள குறைகளை நாம் அறியும் வழியே.உண்மையில் நேர்பட ஒழுகுபவர்கள் அதிர்ச்சி அடைவதே இல்லை.அவர்களுக்கு, தான் ஒழுங்காக இருப்பதே இன்னும் அவசியம். எல்லாவற்றில் இருந்தும் கற்க அவர்களுக்கு ஏதோ உள்ளது.ஒவ்வொரு நொடியும் தான் செய்ய வேண்டியது ஏதோ உள்ளது.சரியாகப் பார்த்தால்,ஒரு பெரிய stupidity, {அதாவது,நம்முடைய அல்லது பிறருடைய அறியா செயல்கள்},நேரம் கடந்தாவது   மிகவும் தெளிவாக நாம் அறிய வேண்டியதை விளக்கக் கூடும். SRI AUROBINDO MOTHER SAYS,"ANY EXAGGERATION,ANY EXCLUSIVENESS,IS A LACK OF BALANCE AND A BREACH OF HARMONY,AND THEREFORE AN ERROR" யாருக்கு?நேர்பட ஒழுக விரும்புவோருக்கு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 19 ஏப்ரல், 2017

எண்ணங்களாய் நிறைந்தவர்கள்

இரண்டரை மாதங்களாக எதுவும் எழுதவில்லை.மனம் தொடும் நிகழ்வுகளே எழுத்து.60 நாட்களாகவா எதுவும் மனத்தின் ஆழமான பகுதியை அடையவில்லை ?அப்படி என்றால் அந்த நாள்கள் வாழ்ந்த கணக்கா வாழ்வில் இருந்த கணக்கா?வாழத்தான் பிடிக்கிறது.வாழ்க்கை என்பது எண்ணமா ,நம்மைச் சூழ்ந்துள்ள மனிதர்களா,தினப்படி நடக்கும் நிகழ்வுகளா?ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொன்று.எனக்கு வாழ்க்கை எண்ணம்தான்.எந்த ஒரு நிகழ்வு எந்த ஒரு நபர் எண்ண வடிவில் எனக்குள் புக முடியுமோ அவர்களுடன்,அவைகளுடன் நான் நடத்தின நாடகம்,என்னைக் கருவியாக்கி இறைவன் நடத்தின நாடகமே இந்த 50+ ஆண்டுகள் .

இன்று அப்பாவின் பிறந்த நாள்.அம்மாவும் அப்பாவும் வெறும் மனிதர்களல்ல.தெய்வங்களும் அல்ல . அப்பா என்பது ஒரு எண்ணம்.Feel .மனதை மென்மையாக்கி மனதை அமைதியாக்கி உருவம் காட்டாது வ்யாபித்துள்ள எண்ணம்.சென்ற வருஷம் இந்த நாள் தன் இறுதி நாட்களில் இருந்தார்.உண்மையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்திருக்கிறார்.மனிதன் எப்படி எதையும் உணரும் சக்தி அற்ற அற்ப ப்ராணி என்று எண்ணங்கள் ஒடுங்கிப் போகின்றன. "Many more happy returns அப்பா "என்று பிறந்த நாள் வாழ்த்து ,வாழ்த்த வயதில்லாததால் வணக்கம் சொன்னேன்.அதற்கு பொருள் என்ன?தம் வாக்கால் ஒன்று சொன்னால் நடக்கும் என்று உணர்ந்தவர் தவிர பிறர் கூறும் இந்த வார்த்தைகள் வெறும் ஓசை அன்றோ?நல்ல வார்த்தைகளே வெறும் ஓசைகள் என்றால்,நிஜமான ஓசைகள் கேட்கப் பிடிக்காது போவது தப்பில்லை.என் அப்பாவின் இறுதி நாட்கள் அப்படித்தான் ஆரவாரம் குறைந்து போய்,ஆசைகள் அற்றுப்போய் ,எல்லா ஒலிகளும் ஓசையாய் ஒலித்து ,சாப்பிடுவது ஒரு வேலையாகிப்போய்,குளிப்பது கூட நம்முடையது அல்லாத ஒரு பாத்திரத்தைக் கழுவும் வேலை போலாகி நகர்ந்தன.திட்டம் இட முடியாத இறுதிப் பயணமும் அதே போல் " கொஞ்சம் வெளில போய் வரேன்" என்பது போல் நிகழ்ந்தது.என்ன, "வரேன்" மட்டும் சொல்லவில்லை. "இந்த வாழ்வும்,,இந்தக் கூடும் இந்த எல்லாமும் போதும்.அனுப்பி வைத்தவன் வேறு நல்ல , ""விசையுறு பந்து போல் உடல் தருகிறேன்,வா""  என்று ஆசை காட்டி அழைக்கிறான் .சொல்லிக் கொண்டு புறப்பட்டால் மூக்கிலும் வாயிலும் ஒரு கருவி பொருத்தி ஹாஸ்பிடலில் ,நீங்கள் கடவுள் என நினைப்பவரிடம் என்னை அனுப்பி வைப்பீர்கள்.நைந்த இந்த தேகத்தில் இன்னும் கொஞ்சம் நாள்கள்,அர்த்தமற்ற சஞ்சலங்கள்,போதும் சாமி "என்று சட் என,நொடியில் நகர்ந்து விட்டார்.இன்று உன்னை ரொம்ப நினைத்துக் கொள்கிறேன் அப்பா.நான் கூறியபடி நீ எண்ணமாய் எனக்குள் நிறைந்திருந்தால் எங்கே போய் விடுவாய்?மறுபடி உன்னைப் பார்ப்பேன்.

எண்ண வடிவில்,ஒவ்வொருவருக்குள்ளும்  நிகழ்வுகள்,மனிதர்கள் உண்டு.புறச் சலனங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.வாழ்வு அகம் சம்பந்தப் பட்ட ஒன்றே.அகம் அழகானதொரு உலகம்.அதை சரியானபடி திறக்க இறை அருள் தேவை என்றாலும்,போனால் போகிறது என சாவியை பகவான் நம் கையில் கொடுத்து வைத்துள்ளார்.தொலைத்து விட்டுத் தேடக் கூடாது.எண்ணமாய் நிறைந்த சிலருடன்,அதிக மக்கள் தொகை அற்ற நாடுகள் போன்றதொரு அக உலகம் சுகம். சாவியை குறைவாக,பயன்படுத்தினால் நிம்மதி.அது நம் சாய்ஸ். தத்துவம் மாதிரி தோன்றினாலும் எளிமையான உண்மை இதுதான்.வாழ்வு என்பது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களில் நிறைந்தவர்கள்,நிறைந்தவைகளே.வெளியே நிகழும் சந்திப்புகள்,நம் தொடர்புகள்,நிகழ்வுகள் எல்லாம் சினிமாதான்.பொழுதுபோக்குத்தான்.ஆமாம்,பொழுதுபோக்குக்காக எத்தனை நேரம் செலவிடலாம்?......தொடரும்?.......

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects

வியாழன், 9 பிப்ரவரி, 2017

இரண்டாவது குழந்தைப் பருவம் கொண்டாட்டமா திண்டாட்டமா

உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள்  சந்திக்கும் போது பொதுவாக அதிகம் அவசியமற்ற விஷயங்கள் பேசப் படுகின்றன என்பதே என் எண்ணம்.எது அவசியம்,எது அவசியம் இல்லை என்பது வேறுபடலாம்.இன்று எனக்கு ஏற்பட்ட சந்திப்புகள்,பாதிப்புகள்,விவாதங்களே இந்த போஸ்ட்.எல்லா காலங்களிலும் speech silver , silence gold தான். உங்களுக்கு,எனக்கு,ஏன் எல்லாருக்கும் சில விஷயங்கள் பேசி பலனில்லை என்று தெரியும்.ஆனாலும் பேசுவோம்.பகவான் விஷ்ணுவின் அடிமுடி காண இயலாத அளவு ஒரு பிரச்சினை முதியோருக்கும் இளையவர்களுக்கும் நடுவில் நடக்கும் மனப் போராட்டங்கள். இன்று என்  தங்கை கேட்டாள் , "குழந்தைகளுடைய  சிறுவயதில் ஆசை ஆசையாக எல்லா இடத்துக்கும் பெற்றோர்  கூட்டிச் செல்கிறார்கள்,தளர்நடை பயிலும் செல்வங்களைக் கைப் பிடித்து அழைத்துச் செல்வது இன்பம் தருகிறது.ஆனால் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி,பெற்றோரை அப்படி அழைத்துச் செல்வதிலும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் அந்த அளவு இன்பம் காண்பதில்லையே,ஏன்? " சரியான கேள்வி.அம்மா,அப்பாவை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட மனசாட்சியிடம் சற்றுப் பேசிப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படும்.முதியவர்களை குழந்தைகளிடம் காட்டும் அதே பாசத்துடன் அணுகுகிறோமா?சற்றும் சலிப்பில்லாமல்? ஆமாம் என்று சொல்லும் யாரையும் நான் நம்ப மாட்டேன்.நம் குழந்தைகளுடன் நமக்கு உள்ள கெமிஸ்ட்ரி வேறு.பெற்றோரிடம் உள்ளது வேறுதான். காரணம் என்ன?

அறியாய் பருவத்தில் இருக்கும் குழந்தையும்,எல்லாம் அநேகமாக அடங்கிய முதியோரும் சார்ந்து இருப்பவர்கள்.யாரோ ஒருவரை சார்ந்து செயல்பட வேண்டி உள்ளவர்கள்.இரண்டு சார்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளே சலசலப்புகள்.குழந்தையை நம் விருப்பப் படி எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்வோம்.என் குழந்தைக்கு கோவில் என்றால் உசிர் என்று நாமே முடிவு செய்த ஒன்றை குழந்தை மேல் திணித்து நாம் விரும்பும் இடங்களுக்கு சென்று வருவோம்.நம் நம்பிக்கைகளே பெரும்பாலும் நம் குழந்தைகளின் நம்பிக்கை.இளம் குழந்தைக்கு யோசிக்கும் திறன் வளர நாளாகிறது.மனதளவிலும் உடலளவிலும் அது நம்மால் வழி நடத்தப் படுகிறது.நமக்கு ,நம் ஈகோ நிறைந்த மனசுக்கு அது சந்தோஷம் தருவது வியப்பில்லை.ஆனால் முதியவர்கள்! அவர்களுக்கு தேர்வு செய்யத் தெரியும்.எங்கே செல்ல வேண்டும்,எங்கே தங்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கத் தெரியும்.பண்ண வேண்டிய மனம் சம்மந்தப் பட்ட முடிவுகளைத் தாம் செய்கிறார்கள்.தங்கள் பாதுகாப்புக்கு இளையவர்களைச் சார்ந்துள்ளார்களே தவிர அவர்கள் பற்றி வேறெதையும் யோசிக்கும் மனநிலை பெரும்பாலான பெரியவர்களுக்கு இருப்பதில்லை.ஏன் பிரச்சினை வராது? Decisions எல்லாம் Lead பண்ணுபவரிடம் இருந்தால் தகராறு இல்லை.முடிவை நான் எடுப்பேன்,நீ கதையை நடத்து என்றால் சலிப்புதான் வரும்.அதுவே - நாம் உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் அந்த சலிப்பே பெரியவர்கள் தாம் ignore பண்ணப் படுவதாய் நினைக்க முக்கியக் காரணம்.

இதில் மாற வேண்டியது முதியோர்தான்.குழந்தைகள் இயல்புப் படி நடந்து கொள்கிறார்கள்.நடுவயது மனிதர்கள்,சிலர் தவிர பெரும்பாலானோர் நன்றாக நடந்து கொள்ளவே முயற்சி செய்கிறார்கள்.அவர்கள் அடையும் ஆயாசமும் வயதிற்கு இயல்பாக வரும் ஒன்றே.இயல்புக்கு முற்றிலும் புறம்பானவை செய்யும் முதியோர்தான் யோசிக்க வேண்டியவர்கள்.நான் முதியவர்களுக்கு எதிரி அல்ல. பட்டாம்பூச்சி பறப்பது போல் நிமிஷமாகப் பறந்து சென்ற என் அன்பு அப்பா போல், துறக்க வேண்டியவற்றை நிச்சலனமாகத் துறந்து அமைதி அனுபவிக்கும் முதியோருக்கு நான் எதிரி அல்ல.குழந்தை எப்படி உலகிற்கு வருகிறது?அப்படியே உலகை விட்டு நீங்குபவர்களுக்கு மட்டும்தான் அமைதி கிடைக்கும்.Second childhood என்றால் உடலளவில் மட்டுமா?மனத்தாலும்தானே? ஆயிரம் எண்ணங்கள் அலைமோதுகின்றன.எழுத முடியாது என்று தோன்றுகிறது. குழந்தை தனக்கென தனிமனது பெறும் நொடி அதன் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன.முதியவர்கள் தன் தனிமனதை இழந்த நொடி அவர்கள் போராட்டங்கள் முடிவடைகின்றன.

இன்று அரவிந்த அன்னையின் அவதாரத் திருநாள். பிப்ரவரி 21 ம் நாள்.என்றோ தொடங்கிய போஸ்ட்.இன்று முடிக்கிறேன்.தெய்வங்களும் குழந்தைகளாகவே பிறக்கின்றன.மனத்தால், பல வருஷங்களுக்கு முன் ஜனித்த அந்த தெய்வ குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.மனத்தின் ஆழங்களுக்கு பயணிக்கும் போது எல்லாமே அமைதி என்று  தெரிகிறது. சலனங்கள் வெளியேதான்.தெய்வத்தின் அருள் கொடை கற்பக வ்ருக்ஷம் போல . We can receive it in the silence of the heart.இன்றுள்ள மனநிலையில் தலைப்புடன் தொடர்பாக ஏதும் பேச இயலவில்லை. நாம் விரும்புவது போலவே வாழ்வு அமையும் என்ற உத்தரவாதம் யார் தர இயலும்? நம்மால் வேறெதுவும் செய்ய இயலாது என்ற கடைசி நாட்களுக்காக உள்ளே செல்லும் பயணம் ஒத்திப் போடப்பட்டால் அது முட்டாள்தனமல்லவா?சாக்ரடீஸ் விற்பனைக்காக பரப்பப் பட்டிருந்த பல ஆடம்பர பொருள்களை பார்த்து அதிசயித்தாராம்!"உலகில் எனக்கு வேண்டாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன"என்று.இரண்டாம் குழந்தைப் பருவத்தில் ஒவ்வொன்றாக விடத்தானே வேண்டும்? உறவுகள் ஆசைகள்,செல்வம்,பதவி,புகழ்,தேவையற்ற எண்ணங்கள் என்று குழந்தை ஒவ்வொன்றாக சேர்க்கத்  தொடங்குவது போல ,மறுபடி குழந்தைகளாகி விட்டோம் என்பவர்கள் ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்க வேண்டும் அன்றோ?என்னைத் திட்ட முடியாது. நான் வாழ்வின் இரண்டாம் பாகத்தில்தான் இருக்கிறேன்.சொல்பவை அனைத்தும் முதலில் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்.

தளர்நடையும், பொக்கைவாயும்,ஒருவரை மறுபடி குழந்தை ஆக்குவதில்லை.மனசு என்று ஒன்று உள்ளதே அதுதான் குழந்தை ஆக்குகிறது.பின் ஏன் சிலரைப் பார்த்து அவருக்கு குழந்தை மனசு என்கிறோம்? நிஜமான குழந்தை போல உள்ள முதியவர்கள் குழந்தை அடையும் அத்தனை சலுகைகளையும் அடைந்து,Second Childhood ஐ கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் திண்டாடுகிறார்கள்.அதற்கு அவரவரே பொறுப்பு.உலகில் குழப்பங்கள் இல்லை.எல்லாக் குழப்பங்களும் மனதில் மட்டுமே.ஒரே உலகம் சிலருக்கு சொர்கமாகவும் சிலருக்கு நரகமாகவும் தெரிந்தால் குறுக்கிடுவது மனம்தான் என்று உணர்வோம் . Seneca writes to his friend Lucillius,"நேரம் தவிர வேறெதுவும் உலகில் நம் சொந்தமில்லை.ஆனால் வேண்டாத பல விஷயங்கள்,மனிதர்கள் நம்மிடம் இருந்து அதை திருடி விட இயலும்.திருடினவர் நினைத்தாலும் திருப்பித் தர முடியாத ஒன்று என்பதே அதன் சிறப்பு.நம்முடையது என்ற ஒரே பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? Certain moments are torn from us.Some are gently removed.சீக்கிரம் விழித்துக் கொள் நண்பனே " என்று.Life span நூறு வருஷம் என்றால்,ஐம்பது யோசிக்க சரியான வயதுதானே ? சொல்லப் போனால் லேட் .பேசுவோம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பெண்களின் ஆன்மீக வாழ்வு

ஆன்மிகம் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருள்,எனக்குத் தெரியாது.கத்திரிக்காய் என்றால் தெரியும்.கடலை மிட்டாய் என்றால் தெரியும்.ஆன்மிகம் என்றால் என்ன என்றால் எப்படிக் காட்டுவது?அது ஒரு உணர்வு.ஒரு பொருள் நம் அனைவர் மனங்களிலும் ஒரே பிம்பத்தை உண்டாக்குவது போன்று ஒரு உணர்வு ஒரே எண்ணத்தை நம் மனத்தில் உண்டாக்குமா என்றால்,இல்லை.நம் அனுபவங்களுக்கேற்ப,யோசிக்கும் திறனுக்கேற்ப சில விஷயங்களைப் புரிந்து  கொள்கிறோம்.எனக்குப் புரிந்த வரை,ஆன்மிகமும்,மன அமைதியும் தொடர்புடையவை.இரட்டைக் குழந்தைகள் போல .(அம்மா வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகளைக் குறிப்பிடுகிறேன்.) If we are at peace with our own self,and also with the world ,அதுவே முழுமை.

நமக்குத் தெரிந்த ஆன்மிகப் பெரியோர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.ஏன்?கடவுள் கூட,தன்அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு (Reservation) வைத்துள்ளாரா என்ன! ஏன்,நாம்  100 ஆண்களுக்கு ஒரு பெண்ணைக் கூட குரு ஸ்தானத்திற்கு உயர்த்துவதில்லை ? இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்களுடன்,இறையுடன் ஒரு குட்டி தொடர்பு,ஒரு வினாடி உண்மையான தொடர்பு ஏற்பட்டால் கூட அந்த மனிதன் கட்டாயம் Humble ஆகி விடுகிறான்,என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.பெண்ணின் இயல்பு அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு நிறைந்தது . பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள்தான்.Intuitive ஆக அவர்களுக்குள் இறை உணர்வு  உள்ளது.இன்றைய பெண்கள் பற்றி தப்பு தப்பாய் பல பேசுகிறோம்.திமிர்,யாரையும் மதிக்க மாட்டார்கள் ,தடிப் பசங்களுக்கு சரியாக எல்லாம் செய்வாள் என்று காதால் கேட்க இயலாதவற்றை எல்லாம் கூறுகிறார்கள். தவறு.பாவம்.எப்படி பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறு அமைப்பில் உடல் படைக்கப் பட்டுள்ளதோ அதே போல் இயல்பும் வேறாகத்தான் இறைவன் படைப்பு நிகழ்கிறது.மாற்றுகிற வேண்டாத வேலை செய்வது நாம்.ஒரு உயரதிகாரியின் வேலையில் வாயில் காப்பவர் குறுக்கிடுவது போல் இறைவன் படைப்புடன் விளையாடி துன்பம் தேடுகிறோம்.பெண்ணின் இயல்பை மாற்ற முயலும் நாம் வேறென்ன செய்து விட முடியும்? உருவத்தையும் மாற்ற முடியுமா என்ன?

பெண்களை இயல்புப் படி விட்டால் அனைத்துப் பெண்களும் ஆன்ம பலம் பெருமளவில் கொண்டவர்கள்.கர்மயோகிகள்.அனைத்துப் பெண்களும் அம்மாக்கள்.பௌதிகத் தாய்மார்கள் மட்டும் அம்மா இல்லை.பெண்களை weaker sex என்கிறோம்.ஆனால்,அவர்களுடைய physical energy ம் தாங்கும் திறனும் அலாதியானது.பெண்கள்,தங்கள்  இயல்புப் படி ஞாயத்தின் பக்கம் நிற்க கூடியவர்கள்.ஆனால் கற்பு என்றதில் தொடங்கி எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்ணுக்கே விதிக்கப் பட்டன."கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"என்றார் மஹாகவி பாரதியார்.கட்டுப்பாடு யாருக்கு உண்மையில் தேவை? ஒவ்வொரு பெண்ணின் மனதுமே அவளின் நீதிபதி.புறக் கட்டுப்பாடுகள் பகவான் கிருஷ்ணனை தாய் யசோதா கட்டியது போல் ஒரு பாவனைதான்.

பெண்களின் வாழ்வே ஆன்மிக வாழ்வுதான்.அவர்கள் தனியாக எதுவும் செய்யத் தேவை இல்லை.உபநிஷத ,வேத காலங்களில் மைத்ரேயி போன்ற பெண்கள் ரிஷிகளுக்கு சமமானவர்களாகத் திகழ்ந்தார்கள் என்ற குறிப்புகள் உள்ளன.சோழ மன்னர்கள் காலத்தில்,குந்தவைப் பிராட்டி போன்று அரசியலில் முக்கியப் பங்கு வகித்த பெண்கள் உண்டு.அவர்களின் வழி தோன்றல்கள்தான் எல்லாப் பெண்களும்.பின் வந்த காலங்களில் மாற்றங்கள் தொடங்கின.பெண்கள்  நிலைமை மட்டும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது .காரணம் அவர்கள் தன்பலம் அறியாமல் இருப்பது.பெண்ணுடல் போர்த்துக் கொண்ட தருணம் ஆத்மா தான் உடல் கடந்தது என்பதை மறந்து விடுமோ? Women think with their heart and men with their head என்று சொல்வார்கள்.அது உண்மைதான். ஆணுக்குத் தன்னை நேசித்துக் கொள்வதே முதன்மையாக உள்ளது.பெண்கள் பிறந்தது முதல் தன்னை இரண்டாம் இடத்திலேயே வைத்துக் கொள்கிறார்கள்.தியாகம் என்ற பெயரில் அன்பு என்ற பெயரில்  தன்னை தொலைத்து விடுதல் அவர்களுக்கு சுலபமாய் செய்ய வருகிறது.உள்ளே உள்ள வஸ்துவுடன் ஏற்படும் தொடர்பைத் தக்க வைக்கும் சக்தியை,பெண் மேல் திணிக்கப் பட்ட, அவளாக ஏற்படுத்திக் கொண்ட கட்டுகள் வலிமை இழக்கச் செய்கின்றன.   அதெல்லாவற்றையும் தாண்டி இறைவன் அழைப்பு உள்ள பெண்கள் விடுபட்டு விடுகின்றனர்.

ஆனால் எனக்கு இது புதிராகவே மனதில் தங்கி உள்ளது.ஆணுடன் ஒப்பிட்டால் உள்ளுணர்வு அதிகம் கொண்ட பெண்கள் ஏன் பிறர் போற்றும் அளவு அறியப் படவில்லை? இல்லை எனக்குத் தெரியவில்லையா?அப்படியே நான் அறியாமையில் இருப்பினும் விகிதம் குறைவு என்பது உண்மை அல்லவா?எல்லாத்  துறைகளிலும்  பெண்கள் சமமாக சாதிக்கிறார்கள்தான்.ஆனால் அதுவுமே கூடசரி  சமம் இல்லை. அதற்கு பெண்குழந்தைகளைக் கருவில் கொல்ல நினைக்கும்,பெண் பிறந்து விடுமோ என்று திகில் கொள்ளும் முட்டாள் மனங்கள் திருந்த வேண்டும்.புறம் சம்பந்தப் பட்டவை இப்போது பேச வேண்டாம்.அகம் தொடர்பான ஒரு உலகில் ஏன் குடத்துள் விளக்கு போலத்தான் பெண்கள் இருக்கிறார்கள்?ஆனால் ஒன்று.வெளியே ஆன்மிகவாதிகளாய்த் தென்படும் பலரின் வாழ்வை விட,சாதாரண ,ஆர்பாட்டமற்ற ,வெகுளியான இந்தியப் பெண்ணின் வாழ்வு வணங்கத் தக்கது.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS